புண்படுத்திட்டாங்க..பாஜக சூர்யா சிவா மீது போலீசில் புகார்! அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை : பெண்களை இழிவாக பேசிய பாஜக ஓ.பி .சி அணி பொதுச் செயலாளர் சூர்யா சிவா மீதும், தெரிந்து குற்றத்தை மறைத்த பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருச்சியை சேர்ந்த சூர்யா சிவா இவர் தமிழக பாஜ ஓபிசி அணி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது தந்தையான திருச்சி சிவாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசாமல் இருந்து வந்த நிலையில், பாஜகவில் சேர்ந்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து அவர் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஊடகங்களிலும் யூட்யூப் சேனல்களிலும் திமுகவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
ராகுல் காந்தி ஆளே மாறிட்டாரே..சதாம் உசேன் மாதிரி இருக்கிறார்.. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா கிண்டல்
பாஜக டெய்சி சரண்
இந்நிலையில் தான் பாஜகவைச் சேர்ந்த டெய்சி சரணுடன் பேசிய உரையாடல் பரபரப்பை கூட்டி இருக்கிறது. பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவரான டெய்சி சரண், யூடியூப் சேனலில் மருத்துவ குறிப்புகளை வழங்குவதில் பிரபலமானவர். கடந்தாண்டு பாஜகவில் இணைந்த டெய்சி சரணுக்கு, சிறுபான்மை அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறுபான்மை அணியில் நிர்வாகிகளுக்கு பதவி வழங்குவதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சூர்யா சிவா
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மாறி, மாறி அச்சில் ஏற்ற முடியாத ஆபாச வார்த்தைகளில் திட்டி கொள்கின்றனர். இதனால் தமிழக பாஜகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை
இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவத்தை விசாரித்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை சமர்பிக்கும் வரை, சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கு
இந்நிலையில் பெண்களை இழிவாக பேசிய பாஜக ஓ.பி .சி பொதுச் செயலாளர் சூர்யா சிவா மீதும், தெரிந்து குற்றத்தை மறைத்த பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். ஏற்கனவே சூர்யா சிவா திருச்சி உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் வேறு வழக்குகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவுரை
இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக பாஜகவின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் பேசுகையில், பாஜகவில் சேர்ந்து ஓ.பி .சி அணி பொதுச் செயலாளராக உள்ள சூர்யா சிவா பேசியது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் 15 நாட்களுக்கு முன்னரே புகார் அளித்ததாகவும், அண்ணாமலை இரு தரப்பையும் கூப்பிட்டு விசாரித்தார். நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார். என்னையும் சூர்யாவையும் கூப்பிட்டு அறிவுரை வழங்கியதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.