பள்ளிகளில் பாலியல் குற்றங்கள்! மாணவர்களை பாதுகாப்பது ரொம்ப முக்கியம்! முக்கிய உத்தரவிட்ட நீதிமன்றம்!
மதுரை : பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது எனவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் தேவைக்கேற்ப புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வெரோணிக்காமேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போக்சோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. இதில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளன.

பாலியல் குற்றம்
இதனால் பள்ளிப் பயிலும் பெண் குழந்தைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனை தடுக்க தமிழ்நாடு அரசு 2012 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியான அழுத்தத்தை போக்கி, கவுன்சிலிங் வழங்க மொபைல் மனநல ஆலோசனை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால், அதனை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை.

மனநல ஆலோசனை
இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் நடவடிக்கையும் இல்லை. எனவே, 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையங்களை அமைத்து மாணவ மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.

பள்ளிகளில் புகார் குழு
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, "பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது. பாலியல் துன்புறுத்தல் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கின்றது. தமிழக அரசு சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தவும், கொள்கைகளை உருவாக்கவும் உதவும் வகையில், இந்த நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிகழாத வண்ணம், கொள்கைகளை உருவாக்கி அதன் நகல்களை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் புகார் தெரிவிப்பதற்கும், தீர்வு காண்பதற்கும் உரிய நடைமுறை வகுக்கப்பட வேண்டும். இதனை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை அமைக்க வேண்டும். அக்குழு விழிப்புணர்வு நிகழ்வுகளை பள்ளிகளில் நடத்த வேண்டும். அக்குழு மனநல ஆலோசனை மையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications