மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம்.. ஒப்பந்தப்புள்ளி கோரிய தமிழ்நாடு அரசு.. முக்கிய அப்டேட்!
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழ்க்கரையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி கோரி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த டெண்டர் தொடர்பாக வரும் 23ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2017ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழர்களின் பாரம்பரியங்களில் ஒன்றாக ஜல்லிக்கட்டு போட்டிகள், மக்களின் உணர்வோடு உணர்வாக கலந்திருக்கிறது. அதிலும் மதுரையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் வாய்ந்ததாகும்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சொல்லி அடித்த கைக்குறிச்சி காளை.. 26 காளைகளை அடக்கி 'கார்’ வென்ற வீரர்!
ஜல்லிக்கட்டு மைதானம்
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென தனி பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது.
கீழ்க்கரையில் முடிவு
இதன்படி கீழ்க்கரை மற்றும் சின்ன இலந்தைகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது. இறுதியாக கீழ்க்கரை இறுதி செய்யப்பட்டு அங்கு 65 ஏக்கரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயார் செய்யப்பட்டது. இதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு அவ்வப்போது பார்வையிட்டார்.
சிறப்பு அம்சங்கள்
தமிழ்நாடு அரசு தரப்பில் கட்டப்பட உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் அனைத்து விதமான பாரம்பரிய விளையாட்டுகளும் நடத்தும் வகையில் அமைய உள்ளது. சாகச விளையாட்டுக்கு என்று தனி இடமும், மைதானத்தை சுற்றி பல்நோக்கு கண்காட்சி அரங்கம் அமைய உள்ளது. அதேபோல் ஜல்லிக்கட்சி தொடர்பான அருங்காட்சியம் தனியாக அமைக்கப்படும் என்றும், விருந்து நடத்த, உணவு அருந்த தனித் தனி இடங்கள் இந்தத் திட்டத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தப் புள்ளி
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கான தொடக்க பணிகள் முடிவடைந்த நிலையில், கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த டெண்டர் தொடர்பாக வரும் 23ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு அறிவித்துள்ளது. ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்படும் பட்சத்தில், அடுத்தடுத்து பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.