வருகிறது தேவர் ஜெயந்தி.. விழாக் குழுவிடம் தங்க கவசத்தை ஒப்படைத்தார் ஓபிஎஸ்
தேவர் தங்க கவசம் விழா குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை: தேவர் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை வங்கியிலிருந்து தேவர் தங்க கவசத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டு விழா குழுவினரிடம் ஒப்படைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேவரின் ஜெயந்தி தினமான அக்டோபர் 30-ம் தேதி அங்கு விழா நடத்தப்படும். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அங்கு சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
ஜெயலலிதா வழங்கினார்
இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி விழா வருகிற 28, 29, 30 ஆகிய தினங்களில் கொண்டாடப்பட இருக்கிறது. ஜெயந்தி விழாவின் போது அங்குள்ள தேவர் சிலைக்கு அணிவிக்க 13 கிலோ தங்கக் கவசம் ஒன்றினை அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு ஜெயந்தி விழாவின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
விழா குழுவினர்
அதிமுக பொறுப்பில், மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளையில் அந்த கவசத்தை வைத்திருக்கவும், திருவிழாவையொட்டி அதிமுக பொருளாளர் மூலமாக அந்த கவசத்தை பெற்று விழாக் குழுவினரிடம் கொண்டு ஒப்படைக்கவும் ஜெயலலிதா ஏற்பாடும் செய்திருந்தார். இந்த தங்கக் கவசத்தின் மதிப்பு 4.5 கோடி ரூபாய் ஆகும்.
பாதுகாப்பு பெட்டகம்
விழா முடிந்ததும் தங்கக் கவசம் மீண்டும் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு அதே வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுவிடும். இதுதான் நடைமுறை. அதன்படிதான் கடந்த 4 ஆண்டுகளாக ஜெயந்தி விழாவின்போது அந்த தங்க கவசம் வழங்கப்பட்டு வருகிறது.
கவசம் ஒப்படைப்பு
இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி விழா நெருங்கிவிட்ட சூழலில் அதிமுக பொருளாரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் ஆகியோர் வங்கியில் இருந்து தேவரின் தங்க கவசத்தை பெற்று தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தங்க கவசம் காவல்துறையினர் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது.