நீட் தேர்வு விலக்கு- மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மதுரை : தமிழக அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
Recommended Video
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியவதாவது : முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1975 செப்டம்பர் 15ஆம் தேதி அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் 1982 ஆம் ஆண்டு திருமங்கலத்தில் துவங்கப்பட்டு முதலில் மூன்றை ஆண்டுகள் டிப்ளமோ வகுப்பாக துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு ஹோமியோபதி பட்டப்படிப்பு தரம் உயர்த்தப்பட்டது.

ஆண்டுதோறும் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தற்போது 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதால் நான்கு வழி சாலை உயர்த்தப்பட்டதால் கல்லூரி தாழ்வான பகுதியாக உள்ளது.
இதனால் மழைக்காலங்களில் மாதக்கணக்கில் நீர் தேங்கி மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் நிற்கிறது. இதன் காரணமாக கல்லூரி கட்டடங்கள் வகுப்பறைகள் ஆய்வகம் அனைத்தும் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு மாணவர்கள் ஆய்வகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டுள்ளனர். மதுரைக்கு வரும்போது கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் தங்களுக்கு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து., தற்போது ஆய்வு செய்ய வந்துள்ளேன். தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறும் போது, இப்பகுதியில் கால்வாய் அமைத்து கால்வாயை குண்டாற்றுடன் இணைத்து விட்டால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளனர். இதனை மீறி மழை காலங்களில் தண்ணீர் தேங்குமா என ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு பத்து தினங்களுக்குள் இந்த இடத்தில் ஆய்வு நடத்த உள்ளனர்.
ஆய்வறிக்கையின்படி மழை காலங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடத்திற்கு சேதம் ஏற்படும் என தெரிய வந்தால், அருகில் உள்ள இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்படும். இதற்கு கல்லூரி நிர்வாகம்., மாணவப் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பினர், மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் பெற்று இந்த முடிவு செய்யப்படும் என கூறினார்.
இந்த அறிக்கையின் படி ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் புதிதாக கட்டப்படும். அந்தப் பணிகள் நிறைவடைய சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சிலர் ஆணையாளரை அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன். மழை காலங்களில் பாதிப்பு ஏற்படும் என தெரிய வந்தால் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை., சுகாதாரத்துறை சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழக அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் கேட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு எங்கும் கிடையாது. இது தவறான குற்றச்சாட்டு என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.