13 பேர்தான் ஆதரவு- ஆதித்யா தாக்கரே எனும் வாரிசு அரசியலால் நிலைகுலைந்த 'பால்தாக்கரே’ சாம்ராஜ்யம்!
மும்பை: ஒற்றை வாரிசு அரசியலால் அரை நூற்றாண்டுக்கும் மேலான ராணுவ கட்டுப்பாட்டை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த கட்சியையே காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது மகாராஷ்டிராவின் அடையாளங்களில் ஒன்றான சிவசேனா எனும் அரசியல் கட்சி!
சிவசேனா.. மகாராஷ்டிரா தேசியவாதத்தை முன்னிறுத்தி 1960களில் உதயமான கட்சி. கார்ட்டூனிஸ்ட்டாக இருந்த பால்தாக்கரேவால் உருவாக்கப்பட்டது சிவசேனா. மகாராஷ்டிராவின் பெருமிதம் என போற்றப்படுகிற மாவீரன் சிவாஜியின் ராணுவம் என்பது சிவசேனாவின் பெயரில் மட்டுமல்ல.. சிவசேனா தொண்டர்களுக்கும் பொருந்தும். பால்தாக்கரே கண்ணசைவில் கனகச்சிதமாக அத்தனையையும் செய்து முடிக்கும் மாபெரும் தொண்டர் படையையே வைத்திருந்தார்.
அடுத்தடுத்து ஷிண்டே பக்கம் சாயும் எம்எல்ஏக்கள்.. அதிர்ச்சியில் தாக்கரே.. பரபரக்கும் மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே! என்று இளம் பால்தாக்கரே சீறிய சீற்றத்தால் தூண்டிவிட்ட பேச்சுகளால் பெருமளவு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு சொந்த நிலத்தில் அகதிகளாகத் துரத்தப்பட்ட ஒரு இனம் உண்டு என்றால் அது தமிழ்த் தேசிய இனம்தான். மகாராஷ்டிராவில் தமிழர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை சிவசேனா கட்டவிழ்த்துவிட்டதும்... இதனின்று தமிழர்களைப் பாதுகாத்த வரதராஜ முதலியார் எனும் வரதாபாய், மஸ்தான் பாய் டான்களானதும் தாதாக்களானதும் வரலாற்றின் இன்னொரு பக்கங்கள்.
பாஜக-சிவசேனா
வலதுசாரி சித்தாந்தத்துடன் மொழி-இனவழி தேசியவாத சித்தாந்தத்தை கொண்டது பால்தாக்கரேவின் சிவசேனா. இதனாலேயே இயல்பாகவே இந்துத்துவா கொள்கை கட்சியான பாஜகவின் நட்பு சக்தியானது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக பாஜகவின் அசைக்க முடியாத ஆகப் பெரும் பங்காளி கட்சியாக இந்திய நிலத்தில் இருந்த ஒரே கட்சி சிவசேனாதான். பால்தாக்கரே மறைவுக்குப் பின்னர் அவரது மகன் உத்தவ் தாக்கரேவை தங்களது தலைவராக மனதார ஏற்றுக் கொண்டது சிவசேனா. அதனால் அந்த கட்சியின் செல்வாக்கு கிஞ்சித்தும் குறைந்து போய்விடவில்லை.
நேரெதிர் கூட்டணி
ஆனால் 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடியான முடிவை எந்த ஒரு வலதுசாரியாலும் ஜீரணிக்கவே முடியாது. என்னதான் பாஜக, அரசியல் ரீதியாக குடைச்சல் கொடுத்தாலும் இயற்கையான நட்புசக்தியான பாஜகவுக்கு எதிராக, எந்த வகையிலும் கை கோர்க்கவே முடியாத தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸுடன் இணைந்து மெகா கூட்டணி ஆட்சியை அமைத்தார் உத்தவ் தாக்கரே. சிவசேனாவின் ஆகப் பெரும் சறுக்கல் இங்கேதான் தொடங்கியது. சிவசேனாவை பலவீனப்படுத்த பாஜகவுக்கு உத்தவ் தாக்கரேவே அள்ளிக் கொடுத்த ஆயுதமாக இந்த சறுக்கல் அமைந்தது.
வாரிசு அரசியலுடன் மோதல்
அதையடுத்து மகன் ஆதித்யா தாக்கரேவை அமைச்சராக்கினார் உத்தவ் தாக்கரே. பால்தாக்கரேவுக்கு பின் உத்தவ் தாக்கரேவை ஏற்றவர்களால் ஆதித்ய தாக்கரேவை ஏற்க முடியாமல் தவித்துப் போயினர். ஆதித்யா தாக்கரேவின் ஆதிக்கத்தை சசிக்க முடியாதவர்களாக சீனியர்கள் புழுங்கிக் கொண்டிருந்தனர். இத்தகைய புழுக்கம்தான் அண்மையில், பகிரங்க மோதலாக வெடித்ததாம். மகாராஷ்டிராவின் சட்ட மேலவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 2-வது வேட்பாளருக்கு ஓட்டுப் போட ஆதித்யா தாக்கரே நெருக்கடி கொடுக்க, சீனியர் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேருக்கு நேராக எதிர்ப்பு தெரிவித்து மோதியிருக்கிறார். இந்த மோதல் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியுடன் ஓய்ந்து விடவில்லை.
வெறும் 13 பேர்தான் ஆதரவு
இந்த மோதலின் விளைவு இன்று பால்தாக்கரே எனும் ஆளுமை கட்டி எழுப்பிய சிவசேனா எனும் சாம்ராஜ்யத்தையே நிலைகுலைய வைத்திருக்கிறது. மகாராஷ்டிராவின் காட்பாதர் பால்தாக்கரேவின் கட்சியில் பால்தாக்கரேவின் மகனுக்கு வெறும் 13 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு..எஞ்சிய 42 பேர் பால்தாக்கரேவின் மகனுக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கிறார்கள்.. இத்தனைக்கும் காரணமாக அத்தனை விரல்களும் நீள்வது ஆதித்யா தாக்கரே எனும் வாரிசு அரசியலைத்தான்... வாரிசு அரசியல் எனும் கண்ணிவெடி சிவசேனா எனும் சாம்ராஜ்யத்தை இன்றைக்கு வீழ்த்தியது போல நாளைக்கு எந்த சாம்ராஜ்யத்தை தரைமட்டமாக்கப் போகிறதோ? வரலாற்றுக்கே வெளிச்சம்!