சர்வாதிகாரத்தின் தொடக்கம்.. ஸ்டேன் சுவாமி சிறையில் 'கொலை' செய்யப்பட்டுள்ளார்.. சிவசேனா தாக்கு
மும்பை: ஸ்டேன் சுவாமியின் மரணத்தில் மத்திய பாஜக அரசைக் கடுமையாகச் சாடிய சிவசேனா பாஜக எம்பி சஞ்சய் ரவுத், அவர் சிறையில் வைத்து கொலை செய்யப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 84 வயதான சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
பர்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானது. இருப்பினும், ஸ்டேன் சுவாமி உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதால் சிறப்பு நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் அளிக்கவில்லை.

ஸ்டேன் சுவாமி
மும்பை சிறையிலேயே இவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. இருப்பினும், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வந்தது. இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஸ்டேன் சுவாமி கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தார்.

சஞ்சய் ரவுத் காட்டம்
ஸ்டேன் சுவாமி உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அரசின் அடக்குமுறை காரணமாகவே ஸ்டேன் சுவாமி உயிரிழந்ததாகப் பலரும் விமர்சித்தனர். இந்நிலையில், ஸ்டேன் சுவாமி சிறையில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார் என சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் விமர்சித்துள்ளார். 84 வயதான ஸ்டேன் சுவாமிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்டு அஞ்சுகிறார்கள்
இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், "இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, அவர் ஜார்ஜ் பெர்னாண்டஸைப் பார்த்துப் பயந்தார். எங்கு ஜார்ஜ் தனது ஆட்சியைக் கவிழ்த்து விடுவாரோ என அஞ்சினார். ஜார்ஜ் அப்போது ஒரு இளம் தலைவர். ஸ்டான் சுவாமியைப் போல வயதானவர் இல்லை. ஆனால் இன்றைய அரசு 84 வயதான ஸ்டான் சுவாமி வரவர ராவ் உள்ளிட்டவர்களைக் கண்டு அஞ்சுகிறது.

கொலை
சிறையில் ஸ்டான் சுவாமி கொலை செய்யப்பட்டுள்ளார். 84 வயதான மனிதனைப் பார்த்து அஞ்சும் அரசு சர்வாதிகார மனப்போக்கைக் கொண்டது, ஹிட்லர் மற்றும் முசோலினி போலப் பலவீனமானவர்கள். எல்கார் பரிஷத்தில் நடத்தப்பட்ட வன்முறையை யாரும் இங்கு ஆதரிக்கவில்லை. ஆனால் அரசுக்கு எதிராகப் போராடுவதே தேசத் துரோகம் என்று கூறுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்.
Recommended Video

சர்வாதிகாரத்தின் தொடக்கம்
காடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காகப் போராடுவதை எப்படி சதி செய்வதாகப் பார்க்க முடியும். இதைத் தேசத் துரோகம் என எப்படிச் சொல்ல முடியும். சிறையில் 84 வயதான ஸ்டான் சுவாமி கொல்லப்பட்டதை யாராலும் நியாயப்படுத்த முடியாது. அரசை எதிர்ப்பதற்கும் நாட்டை எதிர்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அரசை எதிர்ப்பதே நாட்டிற்கு எதிரான சதி என ஒருவர் நினைத்தால் அதுதான் சர்வாதிகாரத்தின் தொடக்கம்" எனக் கடுமையாக அதில் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications