விபத்து நடப்பதற்கு சில நிமிடம் முன்பு.. சைரஸ் மிஸ்திரி சென்ற காரின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
மும்பை: சைரஸ் மிஸ்திரி சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், விபத்துக்குள்ளாகும் சில நிமிடங்களுக்கு முன் அந்த கார் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்திரி.
சைரஸ் மிஸ்திரி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு நேற்று தனது காரில் பயணம் மேற்கொண்டார்.
பாதுகாப்பான பென்ஸ் காரில் பயணித்தும் சைரஸ் மிஸ்ரி மரணம் ஏன்? அரசு, மக்களுக்கு 6 பாடங்கள்
கார் விபத்து
மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டத்தின் சூர்யா ஆற்றுப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் சைரஸ் மிஸ்திரி மற்றும் அவருடன் பயணித்த ஜஹாங்கிர் பன்டோல் ஆகிய இருவரும் பலியாகினர். இந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். ஜஹாங்கிருக்கு இடது காலில் எலும்பு முறிவும் தலையில் காயமும் ஏற்பட்டது.
போலீஸ் விசாரணை
விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததும், மிக அதிக வேகத்தில் கார் சென்றதும் விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது. பால்கர் மாவட்டத்தில் உள்ள சரோட்டி செக் போஸ்டை கடந்த பிறகு வெறும் 9 நிமிடங்களில் 20 கி.மீ. தூரத்தை கார் கடந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதிவேகமே காரணம்
இதன் மூலம் கார் எவ்வளவு வேகத்தில் சென்றிருக்கும் என்றும், அதிக வேகத்தின் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த செக் போஸ்ட் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதிலும் கார் மிக வேகமாக சென்றது கண்டுபிடிக்கபட்டது. வெறும் 9 நிமிடங்களில் அந்த கார் 20 கி.மீ தூரத்தை கடந்தது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டது.
பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு
இந்த நிலையில், கார் விபத்துக்குள்ளாகும் சில நிமிடங்களுக்கு முன்பு சைரஸ் மிஸ்திரி செல்லும் காரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தெப்ஜாரி ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியை கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோ காட்சியில், ''பரபரப்பான நான்கு வழிச்சாலையில் சைரஸ் மிஸ்திரி செல்லும் கார் வேகமாக கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ காட்சியினை வைத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.