ஸ்டேன் சுவாமி மரணம்.. போராளிகள் புதைக்கப்படவில்லை.. விதைக்கப்படுகிறார்கள்- கனிமொழி அதிரடி ட்வீட்
மும்பை: சமூக சேவகர் ஃபாதர் ஸ்டேன் சுவாமி இன்று மரணமடைந்தார். மகாராஷ்டிரா தலோஜா சிறைச்சாலையிலேயே தொடர்ந்து அடைபட்டு கிடந்த அவருக்கு உணவு உட்கொள்ள ஸ்ட்ரா கொடுக்க கூட 1 மாதம் தாமதம் செய்தது சிறை நிர்வாகம்.
Recommended Video
சிறைக்குள் அவரது உடல்நிலை கருத்தில் எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ள திமுக எம்.பி. கனிமொழி, போராளிகள் விதைக்கப்படுகிறார்கள், புதைக்கப்படுவதில்லை. என்று கூறியுள்ளார்.
84 வயதான ஸ்டேன் சுவாமி, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவின், பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதன் மூலம் வன்முறையை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாக்கப்பட்டுதான் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மனித உரிமை கிடைக்கவில்லை
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதெல்லாம், தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தது என்.ஐ.ஏ அமைப்பு.
ஆனால், சிறையில் ஸ்டேன் சுவாமிக்கு உரிய சிகிச்சைகளும், வசதிகளும் செய்யப்படவில்லை என்பது பெரும் சோகம். பழங்குடியினர் உரிமைகளுக்காக போராடிய ஸ்டேன் சுவாமிக்கு, சிறைக்குள், உரிய மனித உரிமைகள் கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.

உடல் நடுக்க வியாதி
உணவை மெல்லவும் விழுங்கவும் சவால் நிறைந்ததாக கருதப்படும் பார்கின்சன் நோய் உள்ளிட்ட நோய்களால் ஸ்டேன் சுவாமி பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே, உணவை கடித்து சாப்பிட கஷ்டமாக இருப்பதால், உறிஞ்சும் குழாய் (ஸ்ட்ரா) தருமாறு ஸ்டேன் சுவாமி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், நான்கு வாரம் இழுத்தடித்தது தலோஜா சிறை நிர்வாகம்.

1 மாதம் கழித்து ஸ்ட்ரா கொடுத்தனர்
கை, கால்கள், உடல் நடுக்கம் இருந்ததால் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட சாப்பாட்டை கூட வாயில் வைத்து சாப்பிட முடியாததன் காரணமாகவே ஸ்ட்ரா வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் நான்கு வாரம் கழித்துதான் அதனை வழங்கியது சிறை நிர்வாகம். அதுவரை அவர் சாப்பாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்பதை புரிந்து கொள்ள தேவையில்லை.

சுத்தம், சுகாதாரம் இல்லை
கடந்த பல மாதங்களாகவே ஸ்டேன் சுவாமி சார்பில் அவரது வழக்கறிஞர் நீதிமன்றங்களில் முறையீடு செய்து ஸ்டேன் சுவாமிக்கு, சிறைச்சாலைக்கு உள்ளே உரிய தனி மனித இடைவெளி பராமரிக்கப்படவில்லை, சுத்தம், சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை, உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லை, இதற்கான ஏற்பாடுகளை நீதிமன்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஸ்டேன் சுவாமிக்கு சிறையில் கொரோனா பாதிக்கப்பட்டதையும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.

மன்றாடிய ஸ்டேன் சுவாமி
ஸ்டேன் சுவாமி தனக்காக மட்டுமின்றி சிறையில் உள்ள பிற கைதிகளும் சுத்தம் சுகாதாரம் இல்லாமல் இருப்பதை தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தை வழங்க கோரிக்கை விடுத்தார். கடந்த வாரம் கூட மகாராஷ்டிர உயர்நீதிமன்றத்தில் மருத்துவ சிகிச்சை தொடர்பாகவும், ஜாமீன் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்த சுவாமி, தனது உடல் நிலை மோசமாகிக் கொண்டே வருவதால் மரணம் ஏற்படும் நிலையில் இருப்பதாக மன்றாடி இருந்தார்.

கனிமொழி இரங்கல்
இந்த நிலையில்தான் ஸ்டேன் சுவாமி இன்று மரணமடைந்துள்ளார். காங்கிரஸ் சீனியர் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட, பல தலைவர்களும் ஸ்டேன் சுவாமி மறைவிற்கு இரங்கல்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், உடல்நிலையை கருத்தில் கொள்ளாமலேயே பாதிரியார் ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டார். அவரது உடல்நிலை சரியாக பராமரிக்கப்படாததால் அவர் கோமா நிலைக்கு சென்று இறந்துவிட்டார். போராளிகள் விதைக்கப்படுகிறார்கள், புதைக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications