துப்பாக்கியோடு வலம் வரப்போகும் சல்மான் கான்.. லைசென்ஸுக்கு ஓகே சொன்ன மும்பை போலீஸ்
மும்பை: தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ஆயுதம் வைத்துக்கொள்ள பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் அவருக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்த கும்பல் ஒன்று சல்மான் கானுக்கும் கொலை மிரட்டலை சமீபத்தில் விடுத்திருந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில காவல்துறை அவருக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பை வழங்கியது. ஆனாலும் அவர் ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு அம்மாநில காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பாலிவுட் பிரபல நடிகரை கொலை செய்ய பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகருக்கு ஆயுதம் வழங்க காவல்துறை அனுமதித்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடகர் சித்து மூஸ்லாவை போல் கொடூரமாக கொல்லப்படுவீர்கள்.. நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம்
மிரட்டல் கடிதம்
சல்மான் கானின் தந்தை தனது வீட்டின் அருகில் இருக்கும் கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொள்ளும்போது வழக்கமாக ஒரு இருக்கையில் அமர்வார். அப்படி சில நாட்களுக்கு முன்னர் நடை பயிற்சி செய்து பின்னர் இருக்கையில் அமரும்போது கடிதம் ஒன்று இருப்பதை பார்த்துள்ளார். அதை படித்து பார்க்கையில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சல்மான் கானுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலவை கொன்ற கும்பல்தான் சல்மானுக்கும் மிரட்டல் விடுத்திருப்பது தெரிய வந்தது.
பாதுகாப்பு
இந்த சம்வபம் தொடர்பாக சல்மான் கான் மும்பை காவல் ஆணையர் விவேக் பன்சால்கரை நேரில் சந்தித்து தான் ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார். சல்மான் கானின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த காவல்துறை அவருக்கு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதியளித்தது. இந்த அச்சுறுத்தல் வந்த உடனே சல்மான் கான் துப்பாக்கி குண்டு துளைக்காத காரையே பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவரது பாதுகாப்பு தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை இந்த கொலை அச்சுறுத்தல் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியது.
விசாரணை
விசாரணையில் சித்து மூஸ்வாலவை கொலை செய்ததில் முக்கிய புள்ளியான லாரன்ஸ் பிஸ்னோய்தான் இந்த கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. இவர் தற்போது சிறையில் இருந்தாலும், அவருடைய ஆட்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 2018ல் சல்மானை கொல்ல சுமார் ரூ.4 லட்சத்திற்கு துப்பாக்கிகளை வாங்கியதாகவும் பிஸ்னோய் கூறியுள்ளார். சல்மானை கொல்ல தன்னுடைய கூட்டாளி சம்பட் நெஹ்ராவிற்கு தான் உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அரியவகை மான்களை வேட்டையாடிய சம்பவத்தில் அவரை கொல்ல தான் முடிவெடுத்ததாகவும் லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
அரிய வகை மான்கள்
சல்மான் வேட்டையாடிய அரியவகை மான்கள், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபை சேர்ந்த பிஸ்னோய் பிரிவினரின் விருப்பத்திற்குரியவை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாகவே சல்மானை கொல்ல தங்களுடைய கேங் முடிவெடுத்து செயல்பட்டதாகவும் அவர் கூறினார். 1998ல் தனது படத்தின் படப்பிடிப்பின்போது இந்த மான் வேட்டையில் சல்மான் ஈடுபட்டார். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து சல்மான் கான் காவல்துறையை மட்டும் நம்பி இருக்காமல் தனிப்பட்ட முறையில் பாதுகாப்புக்காக பலரை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.