குழந்தைகள் செல்போன் பார்க்கத் தடை.. மீறினால் ரூ.200 அபராதம்.. கிராமமே சேர்ந்து எடுத்த 'செம' முடிவு!
குழந்தைகள் செல்போன் பார்க்கத் தடை விதித்து, வித்தியாசமான உத்தரவை விதித்துள்ளது மகாராஷ்டிரா கிராமம் ஒன்று.
மும்பை: குழந்தைகள் செல்போன்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், ரூ. 200 அபராதம் என வித்தியாசமான உத்தரவு ஒன்று மகாராஷ்டிரா கிராமத்தில் விதிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் ஆறாம் விரலாய், இரண்டாம் மூளையாகவே மாறி விட்டது செல்போன்கள் என்றால் மிகையில்லை. உலகத்தையே நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்டது என செல்போன்களைப் பற்றி பெருமையாகப் பேசினாலும், அதற்கு குழந்தைகளும் அடிமைகளாகி வருவது உலகளவில் பெரும் கவலைக்குரிய விசயமாகவே பார்க்கப்படுகிறது.
அதிலும் கொரோனா தாக்கத்திற்குப் பிறகு குழந்தைகள் செல்போன்களைப் பார்க்கும் அளவு அதிகரித்திருக்கிறது. இதனைத் தடுக்க வேண்டும் என எல்லோரும் விரும்பினாலும், ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்தவாறு தான் உள்ளனர்.
இந்நிலையில்தான், மகாராஷ்டிராவில் இது தொடர்பான வித்தியாசமான உத்தரவு ஒன்றை விதித்துள்ளது ஒரு கிராமம்.
வித்தியாசமான முடிவு
மகாராஷ்டிராவின் எவட்மால் மாவட்டத்திலுள்ளது பான்சி எனும் கிராமம். இம்மாதம் 11ம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில், அக்கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஒருமனதாக ஒரு முடிவெடுத்துள்ளனர். அதன்படி தங்கள் கிராமக் குழந்தைகள் செல்போன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு செல்போன்கள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர்.
ரூ. 200 அபராதம்
இந்த உத்தரவை மீறி குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், சிறுவர், சிறுமியர் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதற்கும், சமூகவலைத்தளங்களில் உலாவுவதற்கும் அடிமையாகி விடாமல் தடுக்க முடியும் என அக்கிராம மக்கள் நம்புகின்றனர்.
நல்ல நோக்கம்
இதுகுறித்து அக்கிராம பஞ்சாயத்து தலைவர் கஜானன் டேல் கூறுகையில், "சிறிய குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்கவே இப்படி ஒரு முக்கிய முடிவு எடுத்தோம். இதனை செயல்படுத்தும் போது தொடக்கத்தில் சிரமங்கள் இருக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இருதரப்புக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும். செல்போன்களால் திசைதிருப்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்மாதிரி கிராமம்
பான்சி கிராம மக்களின் இந்த வித்தியாசமான முயற்சி குறித்து, அம்மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "மராட்டியத்தில் உள்ள கிராமத்தில் தான் முதல்முறையாக இதுபோன்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆச்சரியப்பட வைக்கும் முறையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதனை எடுத்துக்காட்டாக கொண்டு மற்ற கிராமங்களிலும் முயற்சி செய்ய தன்னார்வ தொண்டர்கள் முன்வர வேண்டும்" என்றார்.
டிவிக்கும் தடை
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ள வட்கான் என்ற கிராமத்தில் இதே போன்றதொரு வித்தியாசமான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அதன்படி தினமும் இரவு 7 மணி முதல் 8.30 வரை, அங்குள்ள கிராம மக்கள் அனைவரும் டிவி மற்றும் செல்போன் பார்ப்பதை நிறுத்தி விட்டு, அக்கம்பக்கத்தாருடன் பேசி சிரித்து தங்களது நேரத்தைக் கழிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.