தியாகம்தான் உன்னை உயர்த்தும் குமாரு! விட்டுக்கொடுத்த பட்னாவிஸ்.. பாஜக ஆடிய மைண்ட் கேம்! இதான் காரணம்
மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வர் ஆக்கியதன் மூலம் பாஜக மிக முக்கியமான அரசியல் முடிவை எடுத்து இருக்கிறது. மகாராஷ்டிரா அரசியலை மாற்ற கூடிய முடிவாக இது பார்க்கப்படுகிறது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தற்கு பின் வேறு பல எதிர்கால காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா தனியாக கேட்டுக்கொண்டதால் பட்னாவிஸ் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. பாஜகவின் இந்த முடிவு தாக்கரே குடும்பத்தின் அரசியல் அஸ்தனமானத்திற்கும் வழி வகுக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
மகாராஷ்டிராவில் ட்விஸ்ட்.. துணை முதல்வரானார் தேவேந்திர பட்னாவிஸ்.. இது லிஸ்ட்லயே இல்லையே
சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா முதல்வராக இன்று பதவி ஏற்றார் . தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். நேற்று உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில் சிவசேனாவின் ஷிண்டே அவரின் இடத்தை பிடித்துள்ளார்.
பாஜக முடிவு
இன்று மாலை 4 மணி வரை கூட தேவேந்திர பட்னாவிஸ் பாஜக சார்பாக ஷிண்டே ஆதரவுடன் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே அம்மாநில முதல்வராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். பாஜகவின் இந்த முடிவை மாஸ்டர் ஸ்டிரோக் என்று அழைக்கலாம்.. அமித் ஷாவின் சாணக்கியத்தனம் என்று அழைக்கலாம்.. இந்த முடிவிற்கு என்ன பெயர் வைத்தாலும்.. மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸை முதல்வர் ஆக்காமல் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வர் ஆக்கியது என்பது அம்மாநில அரசியலையே மாற்ற போகும் நிகழ்வாக அமைய போகிறது!
அரசியலை மாற்றும்
ஆம் தமிழ்நாட்டில் எடப்பாடியை அதிமுக முதல்வராக்கிய பின் அரசியல் சூழ்நிலை எப்படி மாறியதோ அப்படி ஒரு மாற்றத்தை மகாராஷ்டிரா அரசியல் சந்திக்க போகிறது என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். முதல்வர் ஆவது கூட விஷயம் இல்லை.. உத்தவ் தாக்கரேவை பதவியில் இருந்து நீக்குவதே நோக்கம் என்பதை ஷிண்டேவை முதல்வராக அறிவித்ததன் மூலம் பாஜகவும், தேவேந்திர பட்னாவிஸும் நிரூபித்து இருக்கிறார்கள். எப்போதும் விட்டுக்கொடுக்காத பட்னாவிஸ் இப்போது விட்டுக்கொடுத்து இருக்கிறார் என்றால்.. கண்டிப்பாக பின்னணியில் வேறு பிளான் இல்லாமல் இருக்காது.
உத்தவ் தாக்கரே
2019ல் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆனதும்.. 80 மணி நேர ஆட்சியை இழந்துவிட்டு.. நான் மீண்டு வருவேன் என்று சபதம் செய்துவிட்டு சென்றார் தேவேந்திர பட்னாவிஸ். தற்போது அவர் சொன்னது போலவே மகாராஷ்டிரா அரசியலில் அதே பவரோடு திரும்பி வந்து இருக்கிறார். ஆனால் திரும்பி வந்த தேவேந்திர பட்னாவிசோ முதல்வர் பதவியை பெறவில்லை. தியாகம்தான் உன்னை உயர்த்தும் குமாரு என்று கூறுவது போல முதல்வர் பதவியை தியாகம் செய்துவிட்டு.. துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார்.
இந்துத்துவா தியாகம்
அவர் இந்துத்துவாவிற்காக இந்த தியாகத்தை செய்துள்ளதாக பாஜக ஆதரவாளர்கள் இப்போதே கொண்டாட தொடங்கி உள்ளனர். சிவசேனா என்றால் தாக்கரே குடும்பம் என்பதை மாற்றி.. அந்த இடத்தில் ஷிண்டேவை அமர வைத்து இருக்கிறார் பட்னாவிஸ். சிவசேனாவிடம் இருந்து தாக்கரே குடும்பத்தை பிரிக்கும் வகையில் ஷிண்டேவை வளர்த்து விட்டு இருக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
ஷிண்டே
அதோடு ஷிண்டேதான் சிவசேனாவின் அடுத்த முகம்.. பால்தாக்கரேவின் அரசியல் வாரிசு இவர்தான் என்று இப்போதே பாஜக narrative ஐ உருவாக்க தொடங்கிவிட்டது. மக்கள் இடையிலும் யார் உண்மையில் பலம் வாய்ந்த சிவசேனா தலைவர் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் மைண்ட் கேமையும் பாஜக முன்னெடுத்து வருகிறது. இதை உத்தவ் தாக்கரே எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று தெரியவில்லை. எம்எல்ஏக்கள் ஷிண்டே பக்கம் இருக்கையில்.. தொண்டர்கள் யார் பக்கம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஷிண்டே முதல்வர்
இப்போது ஷிண்டே முதல்வர் ஆகிவிட்டதால் இதை எதிர்க்க முடியாமல் உத்தவ் தாக்கரேவும் கைகள் கட்டுப்பட்டு இருக்கிறார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆகி இருந்தால்.. பாருங்க சிவசேனாவை அவமதித்துவிட்டனர் என்று பிரச்சாரம் செய்யலாம். ஆனால் ஷிண்டேவை முதல்வர் ஆக்கியதன் மூலம் தாக்கரேவால் இந்த வாதத்தை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் நட்பாக போகாதது அவரின் தப்புதான் என்பது போன்ற பிம்பம் தாக்கரேவிற்கே எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய தலைவர்
இந்த மூவ் மஹாராஷ்டிராவில் ஷிண்டே என்ற புதிய அரசியல் தலைவரை அங்கு உருவாக்கும். ஷிண்டே பிரபலமான தலைவர்தான் என்றாலும்.. ஆளுமை மிக்கவர் என்ற அடையாளம் எல்லாம் இல்லை. இப்போது ஷிண்டேவை முதல்வராக்கியதன் மூலம் கெஜ்ரிவால், பகவத் சிங் மன், எடப்பாடி போன்றவர்கள் உருவாகியது போல ஷிண்டேவும் தலையெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது கண்டிப்பாக தாக்கரேவிற்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்க போகிறது.
கட்சியை காக்க வேண்டும்
ஆட்சியை இழந்தவர் தற்போது கட்சியை காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஷிண்டே பக்கம் இருப்பதால் சின்னத்தை இழுக்கும் அபாயமும் தாக்கரேவிற்கு ஏற்பட்டுள்ளது. இப்போது தேவேந்திர பட்னாவிஸ் விட்டுக்கொடுத்தது அவர் எதிர்காலத்தில் அடைய போகும் வெற்றிகளுக்கான சின்ன டோக்கன் என்றுதான் சொல்ல வேண்டும். உத்தவ் தாக்கரேவை வீழ்த்தியதன் மூலம் மகாராஷ்டிராவில் மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் லைம் லைட்டிற்கு வந்துள்ளார். துணை முதல்வர் பதவி எல்லாம் பெயருக்குத்தான்!
பட்னாவிஸ் முதல்வர் இல்லை என்றாலும் அவர்தான் நிழல் முதல்வர் போல கட்டளைகளை இட போகிறார். யாருக்கு தெரியும் அவரே கூட சில மாதங்கள் கழித்து முதல்வர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!