பெரும் பரபரப்பு! நாமக்கல்லில் பெரியார் சிலை சேதம்! உடனே சம்பவ இடத்தில் குவிக்கப்பட்ட போலீசார்
நாமக்கல்: நாமக்கல் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பெரியார் சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி நாமக்கல் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் நேதாஜி சிலை உள்ளது. அதற்கு எதிரே பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகிய 3 பேரின் மார்பளவு சிலை உள்ளன.
இவை அதிமுக சார்பில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இன்று மாலை அங்கிருந்த பெரியார் சிலை மட்டும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், பதற்றம் ஏற்படுவதைத் தடுக்க மூன்று சிலைகளையும் உடனடியாக மூடினர்.
பெரியார் சிலையைச் சேதப்படுத்தியது யார் என்று விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், அவ்வழியாகச் சென்ற மினிடோர் ஆட்டோ மோதியதில் பெரியார் சிலை சேதமடைந்திருக்கலாம் எனத் தெரியவந்தது.
இருப்பினும், சிலை சேதம் ஆனதற்கு உறுதியான தகவலோ முழு விவரமோ தெரியவில்லை. இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அசம்பாவிதம் ஏற்படுவதைத் தவிர்க்கச் சிலை அமைந்துள்ள பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். சிலை அமைந்துள்ள பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications