"அதிரடி மன்னன்" புரூஸ்லியின் மரணத்துக்கு காரணம் இதுதானா? வெளியானது ஆராய்ச்சி அறிக்கை.. ஷாக்
நியூயார்க்: தன்னிகரற்ற தற்காப்புக் கலை கலைஞனான புரூஸ்லியின் மரணத்துக்கு அதிகப்படியான தண்ணீர் குடித்து வந்ததே காரணம் என அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக புரூஸ்லியின் மரணத்தை சுற்றி உலவி வந்த மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் சேர்ந்து கண்டறிந்த இந்த விஷயம், புரூஸ்லியின் மரணத்துக்கு விடை அளிப்பதுடன் மட்டுமல்லாமல் உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கிறது.
வீட்டை விட்டு கிளம்பிய பாரதி.. மீண்டும் வில்லியாக மாறிய வெண்பா.. கடைசியில் எதிர்பாராத கதை முடிவு
சரித்திரத் தலைவன் புரூஸ்லி..
உலக வரலாற்றில் மரணத்துக்கு பிறகும் சரித்திரத்தில் நிலைத்து நிற்பவர்கள் மிகச் சிலரே. அந்த வரிசையில் இடம்பெற்றவர்களில் ஒருவர்தான் புரூஸ்லி. சீனாவின் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த ஒருவன், இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தன்வசப்படுத்த முடிந்தது என்றால் அது புரூஸ்லியை தவிர வேறு யாாரலும் இருக்க முடியாது. 1960-கள் வரை உலக சினிமா என்றால் ஹாலிவுட் தான், வேறு எந்த நாட்டு சினிமாவும் உலக அளவில் செல்லக்கூடாது என அமெரிக்கா போட்டிருந்த இரும்பு சுவரை அடித்து நொறுக்கியவர் புரூஸ்லி. எந்த புரூஸ்லியை ஹாலிவுட் வெறுத்ததோ, பிற்காலத்தில் வேறு வழியே இல்லாமல் அவருக்கு அது சிகப்புக் கம்பளத்தை விரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது வேறு கதை.
அசாத்திய கலைஞனின் அகால மரணம்..
குங்ஃபூ, கராத்தே, கிக் பாக்சிங் போன்ற கலைகளில் தன்னிகரற்ற கலைஞனாக வலம் வந்த புரூஸ்லியின் அசாத்திய வேகத்தையும், அளவற்ற வலிமையையும் திரையில் பார்த்து உலக நாடுகள் மெய்சிலிர்த்தன. உண்மையை சொல்லப்போனால், கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட ஆசிய தற்காப்புக் கலைகள் இந்தியாவுக்குள்ளும், உலக நாடுகள் எங்கும் செல்வதற்கு புரூஸ்லியே முழு முதல் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று வரை புரூஸ்லியின் ஒன் இன்ச் பஞ்ச், இரண்டு விரல்களால் புஷ் அப் (தண்டால்) செய்வது போன்றவை இன்றளவும் யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது. இத்தனை வலிமை வாய்ந்த புரூஸ்லி 1973-ம் ஆண்டு தனது 32-வது வயதில் அகால மரணம் அடைந்தது உலகையே அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.
சுற்றி வந்த வதந்திகள்..
இந்த அளவுக்கு உடற்பயிற்சியை செய்தும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தும் புரூஸ்லி எப்படி 32 வயதில் மரணம் அடைந்தார் என்பது இன்று வரை மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. உண்மையில் இன்று வரை புரூஸ்லியின் மரணம் ஒரு மர்மமாகவே இருந்தது. இதனிடையே, புரூஸ்லியின் மரணத்தை சுற்றி பல ஆயிரம் வதந்திகளும் உலா வந்தன. இப்போதும் வந்துக் கொண்டிருக்கின்றன. புரூஸ்லியின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட ஹாலிவுட் திரையுலகினர் அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக வலம் வரும் வதந்தி அதில் முதன்மையானது. மேலும், அவரது மனைவியே அவரை ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றதாகவும் வதந்தி பரவி வந்தது.
வெளியானது ஆராய்ச்சி அறிக்கை..
இந்நிலையில், அமெரிக்க மருத்துவர்களும், உடற்கூறு விஞ்ஞானிகளும் புரூஸ்லியின் மரணம் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பான ஆய்வறிக்கையை அந்த மருத்துவர்கள் நேற்று சமர்ப்பித்தனர். அதில், "புரூஸ்லி 1973-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி காலை வழக்கம் போல உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு தலை வலி ஏற்பட்டுள்ளது. படுக்கையில் படுத்த அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதுதான் புரூஸ்லியின் மரணம் குறித்த டாக்டர்கள் அறிக்கையில் இருக்கிறார். புரூஸ்லி உடல்நலம் குன்றிய தினத்தில் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன்கள் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது. அதாவது, புரூஸ்லியின் சிறுநீரகம் செயலிழக்க தொடங்கி இருக்கிறது.
அளவுக்கு அதிகமாக தண்ணீர்..
நல்ல ஆரோக்கியமான ஒருவருக்கு இப்படி சிறுநீரகம் திடீரென செயலிழந்து போகாது. ஆனால் புரூஸ்லியின் சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம்தான் அவருக்கு இந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு வயது முதலாகவே அதிக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் புரூஸ்லிக்கு இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இதனால் அளவுக்கு அதிகமான தண்ணீரையும், மதுவையும் செரிமானம் செய்ய அவரது சிறுநீரகத்தால் முடியவில்லை. சம்பவம் நிகழ்ந்த அன்றைய தினமும் உடற்பயிற்சி முடித்ததும், நிறைய தண்ணீரை புரூஸ்லி குடித்திருக்கிறார். இதனால் அவர் சிறுநீரகம் திடீரென செயலிழந்து, அவரது மூளை வீக்கம் அடைந்துள்ளது. இதுவே அவர் உயிரிழப்பதற்கு காரணமாகி விட்டது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளவுக்கு மிஞ்சினால்..
புரூஸ்லியின் மரணம் நம் அனைவருக்கும் சொல்லித் தரும் பாடம் இதுதான். நீங்கள் எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அது ஆபத்து தான் என்பதே புரூஸ்லியின் மரணம் நமக்கு உணர்த்தும் பாடமாக இருக்கிறது. சிலர் தண்ணீரை குடிப்பது நல்லது என்பதால் எப்போது பார்த்தாலும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார்கள். அளவுக்கு அதிகமான நன்மையும் ஆபத்தாகி விடும் என்பதே மகா கலைஞன் புரூஸ்லியின் மரணம் நமக்கு சொல்லித் தருகிறது.