நானா? நிதிஷ்குமாரா? யாருடைய ஆதரவு தேவை? முடிவு செய்யுற நேரம் இது.. பாஜகவை மிரட்டும் சிராக் பாஸ்வான்
பாட்னா: இனிவரும் நாட்களில் என்னுடைய ஆதரவு தேவையா? நிதிஷ்குமாரின் ஆதரவு தேவையா? என்பதை பா.ஜ.க. முடிவு செய்ய வேண்டிய நேரம் இது என்று லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் எச்சரித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க.வுடன் மட்டும் கூட்டணி என கூறினார் சிராக் பாஸ்வான். அதேநேரத்தில் பா.ஜ.க.வுக்காக அதன் கூட்டணி கட்சியான ஜே.டி.யூவை எதிர்த்து வேட்பாளர்களையும் நிறுத்தினார் சிராக் பாஸ்வான்.
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தியின் இந்த நடவடிக்கையால் ஜே.டி.யூ. பல இடங்களில் தோல்வியை தழுவ நேரிட்டது. பா.ஜ.க. நினைத்தது போலவே அந்த கட்சியை விட ஜே.டி.யூ. குறைவான இடங்களில்தான் வெல்ல முடிந்தது.

பாஸ்வான் கட்சியில் பிளவு
இதற்கு பிரதிபலனாக தமக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என காத்திருந்தார் சிராக் பாஸ்வான். ஆனால் திடீரென லோக் ஜனசக்தி கட்சியின் 5 எம்.பி.க்கள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகி தங்களை தனி அணியாக செயல்படக் கோரி லோக்சபா சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதனை லோக்சபா சபாநாயகரும் ஏற்றுக் கொண்டார்.

ஜேடியூ, பாஜக மீது அதிருப்தி
இதனால் லோக் ஜனசக்தி கட்சியில் சிராக் பாஸ்வான் தனிமைப்படுத்தப்பட்டார். தமது கட்சி இப்படி இரண்டாக பிளவுபட்ட நேரத்தில் பா.ஜ.க எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது. இதனால் கொந்தளித்த சிராக் பாஸ்வான், தமது கட்சியை உடைத்ததன் பின்னணியில் பா.ஜ.க, ஜேடியூ இருப்பதாக சந்தேகம் தெரிவித்து வந்தார்.

எப்போதும் பாஜக ஆதரவு
அத்துடன் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கை கோர்த்து செயல்படும் முடிவையும் சிராக் பாஸ்வான் வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் பாட்னாவில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சிராக் பாஸ்வான் கூறியதாவது: சி.ஏ.ஏ, என்.ஆர்.சி. என ஒவ்வொரு பிரச்சனையின் போது நான் பா.ஜ.க.வையே ஆதரித்தேன்.

பாஜக கையில் முடிவு
ஆனால் இந்த விவகாரங்களில் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்தவர் நிதிஷ்குமார். தற்போது நிதிஷ்குமாரின் ஆதரவு தேவையா? என்னுடைய ஆதரவு தேவையா? என்பதை பா.ஜ.க. முடிவு செய்ய வேண்டிய நேரம் இது. இதனை பா.ஜ.க.தான் வெளிப்படுத்த வேண்டும்.

ஆர்ஜேடியுடன் கூட்டணியா?
என்னுடைய தந்தையார் ராம்விலாஸ் பாஸ்வானும் லாலு பிரசாத் யாதவும் மிக நெருங்கிய நண்பர்கள். நானும் ஆர்ஜேடி தற்போதைய தலைவர் தேஜஸ்வி யாதவும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள். தேஜஸ்வி என்னுடைய தம்பி.. ஆர்ஜேடியுடன் கூட்டணி வைப்போமா? இல்லையா? என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். இவ்வாறு சிராக் பாஸ்வான் கூறினார்.












Click it and Unblock the Notifications