“செம ஜோக்” - பாஜக குற்றச்சாட்டுக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்
பாட்னா: நிதீஷ் குமார் குடியரசு துணைத் தலைவராக விரும்பியதாக பாஜக எம்.பி. சுஷில் குமார் தெரிவித்தது நகைச்சுவையாக உள்ளது என்று பீகார் முதலமைச்சர் பதிலளித்து இருக்கிறார்.
2017 ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக ஆதரவோடு ஆட்சியை தொடர்ந்த நிதீஷ் குமார், 2020 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 45 இடங்களில் மட்டுமே வென்றது.
பாஜக 77 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மறுபக்கம் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 79 இடங்களில் வென்று அதிர்ச்சி கொடுத்தது. ஆனாலும் நிதீஷ் குமாரை முதலமைச்சராக்கி கூட்டணியில் அங்கம் வகித்தது பாஜக.

பாஜக
ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைவிட அதிக இடங்களில் வென்றதால் பீகார் அரசில் அதிகாரத்தை கையில் எடுத்து தன்னிச்சையாக பாஜக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன் காரணமாகவே நிதீஷ் குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

அதிருப்தி
இதனால், பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது பாஜகவுக்கு 9ல் ஒரு இடத்தை மட்டுமே ஜேடியு வழங்கியது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டங்களை நிதீஷ் குமார் எதிர்த்து வருவது, பாஜகவுக்கு விருப்பமின்றி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயன்றது, மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தது போன்ற விசயங்களால் பாஜக தலைமையும் நிதீஷ் குமார் மீது அதிருப்தியில் இருந்திருக்கிறது.

புறக்கணிப்பு
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் நிதீஷ் குமார் பங்கேற்க மறுத்த பின்னர் கூட்டணி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. ஒரே மாதத்தில் பிரதமரின் 2 நிகழ்ச்சிகளை நிதீஷ் குமார் புறக்கணித்த நிலையில்தான் இருகட்சிகள் இடையேயே மோதல் வெட்டவெளிச்சமானது. இதனை தொடர்ந்து எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நிதீஷ் குமார்.

பதவியேற்பு
இனை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க முன்வந்தன. இதனை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை விட்டு விலகிய நிதீஷ் குமார் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

செம ஜோக்
பாஜக எம்.பியும் பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான சுஷில் குமார் மோடி, "ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் சிலர் என்னை அணுகி நிதீஷ் குமாருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி வழங்கி டெல்லிக்கு அனுப்பிட்டால் பீகாரில் தாங்கள் முதலமைச்சராகிவிடலாம் என்று நினைத்தனர். சிலர் என்னை முதலமைச்சராக்குவதாக கூறினர். என்றார். இதற்கு பதிலளித்த நிதீஷ் குமார், "நாங்கள் தேசிய ஜனதா கூட்டணிக்கே ஆதரவு அளித்தோம். நான் குடியரசுத் துணைத் தலைவராக விரும்பினேன் என்று சொல்வது ஜோக்" என்றார்.












Click it and Unblock the Notifications