பீகார்:கூட்டணிக்கு குட்பை சொல்லும் ஜேடியூ? முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் நீக்கமா? பதறும் பாஜக!
பாட்னா: பீகார் முதல்வர் பதவியில் இருந்து ஜேடியூ தலைவர் நிதிஷ்குமாரை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடியோ இத்தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த கூட்டணியில் ஜேடியூ தவிர பெரிய மாநில கட்சிகள் எதுவும் இல்லை.
பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனாலும் பாஜகவுடன் ஜேடியூ தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் முரண்பட்டும் வருகிறது. பாஜகவும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஜேடியூவை சீண்டிப் பார்க்கவும் தவறுவதும் இல்லை. அருணாச்சல பிரதேசத்தில் ஜேடியூவின் எம்.எல்.ஏக்களை கொத்தாக வளைத்து அக்கட்சியின் எதிர்க்கட்சி அந்தஸ்தையே கபளீகரம் செய்தது பாஜக. அதேபோல் பல மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக ஜேடியூ செயல்பட்டும் வருகிறது.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணி ஆட்சி தொடருகிறது. அண்மைக்காலமாக இரு கட்சிகளிடையேயான உறவில் விரிசல் உச்சத்தை எட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜக அணியில் இருந்து ஜேடியூ விலகும் என்றும் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் நெருக்கம் காட்டுகிறது ஜேடியூ.
இந்நிலையில்தான் நிதிஷ்குமாரை முதல்வர் பதவியில் இருந்து பாஜக நீக்கப் போகிறது என்கிற தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. இதனை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக ராஜ்யசபா எம்.பி.யும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி, 2025-ம் ஆண்டு வரை பீகார் முதல்வராக நிதிஷ்குமார்தான் நீடிப்பார். பாஜக-ஜேடியூ கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள்தான் இத்தகைய பொய்யான பிரசாரத்தை பரப்பி வருகின்றன என்றார்.