பிரிவினைவாதம்.. காஷ்மீரை தனிநாடாக அங்கீகரித்து கேள்வி.. வினாத்தாளால் வெடித்த சர்ச்சை..பாஜக கொதிப்பு
பாட்னா: பீகார் மாநிலத்தில் காஷ்மீரை தனிநாடாக அங்கீகரித்து கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை வெடித்துள்ளது. இதனை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
தமிழ்நாடு உள்பட இந்தியாவில் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களில் நடத்தப்படும் தேர்வுகளுக்காக அச்சிடப்படும் வினாத்தாள்கள் அடிக்க விவாதத்துக்கு உள்ளாகும்.
அதாவது குறிப்பிட்ட சாதி, மதம், இனக்குழு, நாடு, தலைவர்கள் குறித்து தவறான வகையில் கேள்வி கேட்கப்படுவதே இதற்கு காரணமாகும்.
லண்டன் காந்தி சிலையில் இருந்த அழுக்கு..சுத்தம் செய்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி..குவியும் பாராட்டு
7 ம் வகுப்பு வினாத்தாள்
அந்த வகையில் தான் தற்போது பீகாரில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியில் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 7 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் ஆங்கில கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த கேள்வி தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
காஷ்மீரை தனிநாடாக
அதாவது அந்த வினாத்தாளில் சீனா, நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்கள் எப்படி அழைக்கப்படுகிறார்கள் என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. இதில் சீனா, நேபாளம், இங்கிலாந்து, இந்தியா ஆகியவை தனி நாடுகளாக உள்ள நிலையில் இந்தியாவில் உள்ள காஷ்மீரையும் தனிநாடு என்ற அடிப்படையில் இந்த கேள்வி அமைந்துள்ளது. இதுதான் சர்ச்சைக்கு காரணமாகி உள்ளது.
பீகார் கல்வி வாரிய வினாத்தாள்
இந்த வினாத்தாள் பீகார் கல்வி வாரியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் இந்த கேள்வி உள்நோக்கத்துடன் கேட்கப்பட்டதா? இல்லை கவனக்குறைவாக பிழையாக கேட்கப்பட்டதா? என்பது பற்றிய விபரம் இன்னும் தெரியவில்லை. இதுபற்றிய விசாரணை துவங்கப்பட்டுள்ளது. பீகாரில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்படுவது முதல் முறையல்ல. கடந்த 2017 ல் இதேபோன்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கொதிப்பு
இந்நிலையில் தான் இந்த கேள்விக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் முன்னணி தலைவராக உள்ள சுஷாந்த் கோபே கூறுகையில், ‛‛இது பீகாரில் நடக்கும் கூட்டணி ஆட்சியில் செயல். குழந்தைகளின் மனதில் காஷ்மீரையும், இந்தியாவையும் பிரித்து காட்டும் முயற்சி நடக்கிறது. இது தவறான நோக்கம். வரும் தேர்தலுக்கு முன்பு அரசியல் செல்வாக்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நிதிஷ் குமார் சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக தான் இந்த கேள்வி உள்ளது'' என்றார்.
பாஜகவுடன் மோதல் போக்கு
பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் -பாஜக கூட்டணி ஆட்சி நடந்தது. நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். இந்த கூட்டணி சமீபத்தில் முறிந்தது. இதையடுத்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி பிரதான எதிர்க்கட்சியான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானார். இதன் தொடர்ச்சியாக பாஜக-நிதிஷ் குமார் இடையே கடும் வார்த்தை போர் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.