திருநள்ளாறு தொகுதி அமமுக "வேட்பாளர்" பாஜகவுக்கு திடீர் ஜம்ப்.. அனல் பறக்கும் அரசியல்
புதுச்சேரி: திருநள்ளாறு தொகுதி அமமுக வேட்பாளர் தர்பாரண்யேஸ்வரன் பாஜகவில் இணைந்துள்ளார். அமமுக வேட்பாளர் பாஜகவில் இணைந்ததால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலும் புதுச்சேரி சட்டசபை தேர்தலும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாகத்தான் நடக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 முனைப் போட்டி
திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் இரு மாநிலங்களிலும் 5 முனைப் போட்டி நிலவுகிறது. அதனால் தேர்தல் பிரச்சாரங்கள் தீயாக நடந்து வருகின்றன.
வேட்புமனு தாக்கல்
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தொகுதியின் அமமுக வேட்பாளராக தர்பாரண்யேஸ்வரன் அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கலும் செய்தாகிவிட்டது. ஆனால் இன்று அவர் பாஜகவில் இணைந்தார்.
கட்சி மாறிய வேட்பாளர்
மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், அர்ஜுன்ராம் மேக்வால் முன்னிலையில் தர்பாரண்யேஸ்வரன் பாஜகவில் இணைந்தார். திமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி சம்பத், தமிழக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவுக்கு அழைப்பு
சிடி தனது பேட்டியில் ரவி, சுய மரியாதையை விரும்புபவர்கள் பாஜகவிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாதகமான சூழல் உள்ளதால் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார் ரவி. அமமுக வேட்பாளரே பாஜகவுக்கு தாவியுள்ளது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசியல்
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. ஆனால் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். ஆட்சி கவிழ்ந்தது. அவர்கள் பாஜகவில் சேர்ந்து பரபரப்பை கிளப்பினர். இப்போது வேட்பாளரே பாஜகவிற்கு தாவியுள்ளது குறிப்பிடத்தக்கது.