ராம்குமார் மரண வழக்கு: மனித உரிமை ஆணையம் முன் பரபரப்பு குறுக்கு விசாரணை
ராம்குமார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்திருந்தார் என்கிற அரசு மருத்துவர் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக சிறைத்துறை மருத்துவரும் சாட்சியம் அளித்துள்ளார்.
சென்னை: சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது உடலில் விரைப்புத்தன்மை இருந்தது என்பதால் அவர் முன்னரே இறந்திருக்க கூடும் என அரசு மருத்துவர் முன்னர் சாட்சியம் அளித்திருந்த நிலையில் தற்போது அவர் கூற்றை உறுதி செய்யும் வகையில் சிறைத்துறை மருத்துவர் தான் சோதித்தபோது நாடித்துடிப்பு இல்லை என மனித உரிமை ஆணையம் முன் சாட்சியம் அளித்துள்ளார்.
விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு
தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கு
தமிழகம் தாண்டி இந்தியாவையே உலுக்கிய கொலை வழக்கு சுவாதியின் கொலை வழக்கு. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி வெட்டிக்கொல்லப்பட்டார். நுங்கம்பாக்கம் போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் ராம்குமார் என்பவர் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தார். பின்னர் ராம்குமாரை தேடிய போலீஸார் அவரது ஜூலை 1 ஆம் தேதி சொந்த ஊரில் அவரை கைது செய்தனர்.
தற்கொலைக்கு முயன்ற ராம்குமார்
ராம்குமாரின் வீட்டை போலீஸார் சுற்றி வளைத்த போது ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுவாதி கொலைக்கான காரணம் ஒரு தலை காதல்
ஒரு தலை காதல் கொண்ட ராம்குமார் தனது காதலை ஏற்காததால் இந்த கொலையை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுவாதி கொலையில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பலர் ஆட்சேபம் தெரிவித்தனர். ராம்குமார் வழக்கை வாதாடிய வழக்கறிஞர் ராமராஜனும் அதையே தெரிவித்திருந்தார்.
சிறையில் தற்கொலை
இந்த நிலையில் புழல் சிறையில் இருந்த ராம்குமார் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி மின்சார வயரை கடித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடும் நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளித்தும் அவர் பிழைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொள்வதற்காக மின்சார ஒயரை கடித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.
மரணத்தில் மர்மம் வழக்கு- பிரேத பரிசோதனை
ராம்குமார் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். போராட்டம் நடந்தது. செப்.22 முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஊடக வெளிச்சம் இன்றி போனது ராம்குமார் விவகாரம். ஆனாலும் பிரேத பரிசோதனை கோர்ட் உத்தரவுப்படி நடந்தது.
கையிலெடுத்த மனித உரிமை ஆணையம்
ராம்குமார் மரண வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் கையிலெடுத்தது. நீண்ட ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த மாதம் ராயப்பேட்டை அரசு மருத்துவர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ராம்குமார் மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை ஆணைய விசாரணையில் தெரிவித்தது வெளிவந்தது.
தலைகீழான மரண வழக்கு
ராம்குமாரின் உடல் திசுக்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் அவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என ஹிஸ்டோபாதாலஜி (Histopathology) ஆய்வில் தெரிய வந்ததாக துறை நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். ஆணையம் முன் ஆக. 18 ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டிருந்தது.
மருத்துவரும் அதிர்ச்சி தகவல்
மேலும் இந்த அறிக்கையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அப்போது பேராசிரியர்களாக இருந்த மருத்துவர்கள் ஆண்டாள், வேணு ஆனந்த் ஆகியோர் கடந்த 2016, அக்டோபர் 7ஆம் தேதி ராம்குமாரின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது மூளை, இதய திசுக்கள் , நுரையீரல்கள், கல்லீரல், நாக்கு, உதடுகள், மண்ணீரல், சிறுநீரகங்கள் ஆகியவை நல்ல நிலையில் இருந்ததாக சான்றளித்திருந்தனர்.
மின்சாரம் தாக்கி இறந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை
மின்சாரம் தாக்கினால் உடலில் இருக்கும் திசுக்களில் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்கிற கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்கள் பெரும்பாலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் ராம்குமார் உடலில் அப்படியேதும் ஏற்படவில்லை. அவரது திசுக்களை ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உடலை முதலில் பார்த்த ராயப்பேட்டை மருத்துவரின் அதிர்ச்சி அளிக்கும் பேட்டி
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமாரின் உடல் கொண்டு வரப்பட்டது. அந்த உடலுடன் சிறைத் துறை மருத்துவரும் வந்திருந்ததாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவ அதிகாரி டாக்டர் சையது அப்துல் காதர் தெரிவித்திருந்தார். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த எந்த நகலையும் சிறை மருத்துவர் அளிக்கவில்லை. மேலும் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்பட்ட நிலையில் ராம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மருத்துவமனை வரும் முன்னரே மரணம் அரசு மருத்துவரின் சாட்சியம்
ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது அவரது உடலில் விறைப்புத் தன்மை இருந்தது. பொதுவாக ஒருவர் இறந்து 12 மணி நேரம் கழித்துதான் விறைப்புத் தன்மை ஏற்படும். அவரது உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல. அவர் மருத்துவமனைக்கு வரும் பல மணி நேரம் முன்னரே உயிரிழந்திருக்க வாய்ப்புண்டு என சாட்சியமளித்திருந்தார்.
மருத்துவமனை வரும் முன்னரே மரணம் அரசு மருத்துவரின் சாட்சியம்
ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது அவரது உடலில் விறைப்புத் தன்மை இருந்தது. பொதுவாக ஒருவர் இறந்து 12 மணி நேரம் கழித்துதான் விறைப்புத் தன்மை ஏற்படும். அவரது உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல. அவர் மருத்துவமனைக்கு வரும் பல மணி நேரம் முன்னரே உயிரிழந்திருக்க வாய்ப்புண்டு என சாட்சியமளித்திருந்தார்.
மீண்டும் மீண்டும் திருப்பம்
தற்போது இந்த வழக்கில் சிறைத்துறை மருத்துவர் நவீன் மனித உரிமை ஆணையத்தில் அளித்துள்ள சாட்சியத்தில் தான் வீட்டிலிருந்ததாகவும் தகவல் வந்த 10 நிமிடத்தில் சிறைக்குள் சென்றதாகவும் அப்போது ராம்குமார் மயக்க நிலையில் இருந்ததால் அவரை சோதித்தபோது அவருக்கு நாடித்துடிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதயத்துடிப்பை சோதிக்கவில்லை நாடித்துடிப்பை சோதித்தேன் அதுவே போதுமானது, ரத்த அழுத்தத்தை சோதிக்கவில்லை, அவரது நின்றுபோன இதயத்தை இயங்க வைக்க ஊசிப்போட்டேன், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவ நகலை நான் தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை மருத்துவரும் சாட்சியம்
வழக்கு விசாரணையில் பிரேத பரிசோதனை செய்த தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், அரசு மருத்துவமனை மருத்துவர் செல்வகுமார் , சிறைத்துறை அப்போதைய எஸ்.பி அன்பழகன், அப்போது இருந்த காவலர் ஜெயராமன், ஆகியோரும் ஆஜரானார்கள். ராம்குமார் வழக்கறிஞர் அவர்களை குறுக்குவிசாரணை செய்தார். வழக்கு மீண்டும் டிச 7 க்கு ஒத்திவைக்கப்பட்டது.