சேலம்: வெறிநாய் கடித்து 16 பேர் காயம்- மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம்
சேலம்: சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 56-ஆவது டிவிசன் கருங்கல்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு வெறிநாய் கடித்துக் குதறியதில் சிறுமி உள்பட 16 பேர் பலத்த காயமடைந்தனர்.
கருங்கல்பட்டி பிரதான சாலைப் பகுதியில் ஏராளமான அளவில் சில்லி சிக்கன்கடைகள் உள்ளன. இந்தக் கடைளில் உள்ள கழிவுப் பொருள்களைச் சாப்பிடுவதற்காக அந்தப் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் உலாவி வருகின்றன.
இந்த நாய்களைப் பிடிக்கக் கோரி, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த வாரம் மேயர் சௌண்டப்பனைச் சந்தித்து மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் கருங்கல்பட்டி வீரலட்சுமி வித்யாலயா பள்ளிப் பகுதியில் வெறிநாய் ஒன்று பொதுமக்களை கடித்துக் குதறியது.

16பேர் காயம்
இதில், அந்தப் பகுதியைச் சேர்ந்த நிர்மலா, பூபதி, மகாலட்சுமி, மணிமேகலை, கிருஷ்ணம்மாள், விஜயா, ராஜாராம், செந்தில், பழனிசாமி, பிரபு, அசோகன், சுரேஷ், கார்த்தி, பாஜக மாவட்டச் செயலர் செல்வராஜ், 10 வயது சிறுமி புனிதா உள்பட 16 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சேலம் அரசு அதிநவீன மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சென்றனர்.

மருத்துவமனையில் கூட்டம்
ஆனால், அங்கு அனைவருக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேயர் ஆறுதல்
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சேலம் மேயர் சௌண்டப்பன், சேலம் எம்பி வி.பன்னீர்செல்வம், தெற்குத் தொகுதி எம்எல்ஏ எம்.கே.செல்வராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

முற்றுகையிட்ட பொதுமக்கள்
அப்போது, அங்குள்ள பொதுமக்கள் கடந்த வாரமே தெருநாய்களைப் பிடிக்க மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால்தான் தற்போது வெறிநாய் கடித்துள்ளது என்று கூறி மேயர் சவுண்டப்பனை முற்றுகையிட்டனர்.

நாய்களைப் பிடிக்க நடவடிக்கை
அப்போது மேயர், சேலம் மாநகராட்சிப் பகுதியில் தெருநாய்களைப் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுகாதாரத்துறைக்கு உத்தரவு
மேலும், நாய்கள் பெருக்கத்திற்கு காரணமாகக் கூறப்படும் சாலையோர சில்லி சிக்கன் கடைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவு வழங்கப்படும் என்றார் மேயர்.

அடித்துக்கொலை
இதற்கிடையே, பொதுமக்களைக் கடித்த வெறிநாயை செவ்வாய்க்கிழமை இரவு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.












Click it and Unblock the Notifications