மேட்டூர் அணைக்கு அதிகரிக்கும் நீர்வரத்து... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சேலம் : கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, அணையின் பாதுகாப்பை கருதி, வினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியின் உபநதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகிய ஆறுகளில் இருந்தும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த 25ஆம் தேதி இரவு மூடப்பட்ட 16 கண் பாலத்தின் மதகுகள் மீண்டும் திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 16 கண் பாலம் வழியாக 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திறந்து விடப்படும் நீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் நீர் அளவு, 23,000 கன அடியில் இருந்து 25,500 கன அடியாக உயர்ந்துள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும் தண்ணீரும் திறக்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
இதன் காரணமாக, காவிரிக் கரையோர மக்களுக்கு மேட்டூர் வருவாய் துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் - கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக உயந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications