சிவகங்கையில் ஒரு புதுமைப்பெண்... தினமும் முதியவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து அசத்தும் நந்தினி!
சிவகங்கை: சிவகங்கையில் அடிப்படை கல்வி அறிவு இல்லாத முதியவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி தன்னார்வலர் நந்தினி பாடம் சொல்லி கொடுத்து வருகின்றனர்.
குழந்தை மனம் கொண்ட முதியவர்களுக்கு சிறு குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதுபோல் அ, ஆ, என்று சிலேட்டில் எழுதி அவர்களது கையை பிடித்து பாடம் சொல்லி கொடுத்து வருகிறார் நந்தினி.
தான் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அதனால் நொடிந்து போகாமல், தான் பெற்ற கல்வியை மற்றவர்களுக்கும் செலுத்தி அழகு பார்த்து வருகிறார் இந்த புதுமைப்பெண்.

ஆசிரியர்கள் தெய்வம்
ஒரு சமூகத்தை, ஏன் இந்த உலகத்தையே நல்வழிப்பாதைக்கு அழைத்து செல்லும் ஆசான்தான் கல்வி. கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு வந்தே தீரும். ஒரு மனிதனை சிந்திக்க வைத்து அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்வது கல்விதான். அத்தகைய கல்வி போதிக்கும் பணியை செய்து வரும் ஆசிரியர்களை நாம் இறைவனுக்கு அடுத்த இடத்தில் வைத்து இருக்கிறோம்.

மாற்று திறனாளி இளம்பெண்ணின் அற்புதமான பபணி
இத்தகைய கல்வி போதிக்கும் மகத்தான பணியை செய்து வருகிறார் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி தன்னார்வலர் இளம்பெண் நந்தினி. தமிழக கல்வித்துறை 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு, 'கற்போம் எழுதுவோம்' என்ற பெயரில் வயது வந்தோர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கையை பிடித்து பாடம் சொல்லி கொடுக்கிறார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையத்தில் 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தின் கீழ் போதிக்கும் பணியை செவ்வனே செய்து வருகிறார் நந்தினி. தினமும் இந்த பள்ளிக்கு பள்ளிக்கு செல்லும் நந்தினி, குழந்தை மனம் கொண்ட முதியவர்களுக்கு சிறு குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதுபோல் அ, ஆ, என்று சிலேட்டில் எழுதி அவர்களது கையை பிடித்து பாடம் சொல்லி கொடுத்து வருகிறார்.

புதுமைப்பெண்ணின் பணி தொடரட்டும்
சிலர் வேலைக்கு சென்று விட்டு தாமதமாக வந்தாலும், அவர்களுக்காக பொறுமையுடன் காத்திருந்து பாடம் கற்றுக் கொடுத்து வருகிறார் உயர்ந்த உள்ளம் கொண்ட நந்தினி. தான் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அதனால் நொடிந்து போகாமல், தான் பெற்ற கல்வியை மற்றவர்களுக்கும் செலுத்தி அழகு பார்த்து வருகிறார் இந்த புதுமைப்பெண். இன்று என்ன படிக்க போகிறோம்? என்று தினமும் நந்தினி வருகையை ஆர்வமுடன் எதிர்நோக்குகின்றனர் அங்கு வரும் முதியவர்கள். நந்தினியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நந்தினி தொடரட்டும் உங்களது மகத்தான பணி.












Click it and Unblock the Notifications