எப்போதுதான் விடிவு.. போரில் சரணடைந்தோர் பட்டியல் விரைவில் வெளியீடு.. அதிபர் மைத்ரி அறிவிப்பு
இலங்கைப் போரின் போது சரணடைந்தோர் மற்றும் காணாமல் போனோர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன அறிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனோர், ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. கடந்த 2009ம் ஆண்டு மஹிந்தா ராஜபக்சே அதிபராக இருந்த போது இந்த உள்நாட்டுப் போர் உச்சமடைந்து முடிவுக்கு வந்தது.

இந்த இறுதிக்கட்டப் போரின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ ஆவணங்களை சர்வ தேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு அதிர்ச்சிக் குள்ளாக்கின.
போர் காலகட்டத்தின் போது ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் பெண்களும் காணாமல் போனார்கள். அதே போன்று இறுதி கட்டப் போரின் போது இலங்கை ராணுவத்திடம் லட்சக்கணக்கான தமிழர்களும், விடுதலைப் புலிகள் அமைப்பினரும் சரணடைந்தனர்.
காணாமல் போனவர்களின் நிலை என்ன என்றே இதுவரை தெரியாமல் இருக்கிறது. இதற்கான போராட்டங்கள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கடந்த 114 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இறுதிக்கட்டப் போரின் போது ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனோர் பட்டியலை வெளியிட உள்ளதாக அதிபர் மைத்ரி பாலா சிறிசேன அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications