இலங்கை: மீண்டும் பிரதமராகிறார் ரணில்.. ஆட்சி அமைப்பது குறித்து அதிபர் சிறிசேனவுடன் ஆலோசனை
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் ரணில் கட்சி கூடுதல் இடங்களுடன் முன்னிலை வகித்து வரும் நிலையில் மீண்டும் அவரே பிரதமராக பதவியேற்க கூடும் எனத் தெரிகிறது; இது தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனவை ரணில் விக்கிரமசிங்கே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
225 எம்.பி.க்களை இலங்கை நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 196 எம்.பி.க்கள் மக்கள் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்; இதர 29 பேர் நியமன எம்.பி.க்கள்.
இந்த தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ராஜபக்சேவை ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தாலும் ரணில் அணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியங்களே அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்தே மக்களுக்கான நல்லாட்சி அமைப்போம் என்று கூறி ரணில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனவை அவரது இல்லத்துக்கு சென்று ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்தும் பிரதமராக ரணில் பதவியேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.