பெரும்பாலான தலைவர்கள் ராஜபக்சவுக்கு ஆதரவு... சிறிசேன பேட்டியால் அமைச்சர்கள் பதவி விலக முடிவு...
கொழும்பு : பெரும்பாலான தலைவர்கள் ஆதரவால் தான் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்று சிறிசேன அளித்த பேட்டியால் ஆத்திரமடைந்த சில அமைச்சர்கள் பதவி விலக முடிவெடுத்துள்ளனர்.
இலங்கையில் வருகிற ஆகஸ்டு 17-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியில் உள்ள இலங்கை சுதந்திரா கட்சியின் வேட்பாளராக ராஜபக்சே போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி மற்றும் இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவராக அதிபர் மைத்ரி பால சிறிசேனா உள்ளார். ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முதலில் சிறிசேனா அனுமதித்ததாக தகவல் வெளியாகியது.
ஆனால் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சிறிசேனா, ராஜபக்சே பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்றும், பெரும்பாலான தலைவர்கள் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்ததால் தன்னால் எதுவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
சிறிசேனாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசில் இருந்து 3 துணை அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துணையமைச்சர் சுதர்சனி பெர்னாடோபுல்லே , ஊரக பொருளாதார விவகாரங்கள் துறை துணையமைச்சர் லசந்தா அலகியவன்னா, மற்றும், துறைமுகங்கள் கப்பல் துறை துணையமைச்சர் எரிக் பிரசன்ன வீரவர்தனே ஆகியோர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதிபர் சிறிசேனாவின் கருத்து தங்களை மிகவும் காயப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசில் இருந்து மூன்று அமைச்சர்கள் ராஜினாமா செய்வதால் இவ்விவகாரத்தில் சிறிசேனாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.