இலங்கை: தமிழர்கள் வாழும் பகுதியில் தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் கிடைத்து வருவது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளன. அவை, இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்களா? என விசாரணை நடைபெறுகிறது.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள்.
இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான தலைமன்னார் மாவட்டத்தில், திருக்கேதீஸ்வரம் ஆலயம் அருகே குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக சாலையோரம் தோண்டும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது அங்குள்ள புகழ்பெற்ற இந்து கோவில் அருகே மனித எலும்புக்கூடுகள் கிடைத்தது.
தோண்டத் தோண்ட எலும்புகள்
இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், அந்த பகுதியில் மேலும் தோண்டியபோது, 30க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு அப்பகுதியில் மருத்துவக்குழு சட்ட அதிகாரி தனஞ்செயா விஜயரத்னே தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அடுக்கடுக்காய் சடலம்
இதைத் தொடர்ந்து மனித புதைகுழியைத் தோண்டும் பணிகள் எட்டாவது முறையாக வியாழனன்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சுமார் 400 சதுர அடி பரப்பளவில் 5 அடி ஆழத்தில், அடுக்கடுக்காக பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த குழியில் ஆயிரக்கணக்கான பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மனித உடல்கள்
மேலும் நான்கு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அனுராதபுரம் சிறப்புசட்ட வைத்திய அதிகாரி டாக்டர் தனஞ்ஜய விஜயரத்னேசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டவை தவிர்த்து, ஏற்கெனவே இருபத்தேழு மனித உடல்களுக்குரிய எலும்புக்கூடுகள் இதுவரை இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எத்தனை எலும்புக்கூடுகள்
"இருப்பினும் அந்த எண்ணிக்கை சரியானதா என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்த மனித புதைகுழி முழுமையாகத் தோண்டி முடிக்கப்படுவதற்கு முன்னர் சரியான எண்ணிக்கை குறித்த தகவல்களை என்னால் கூற முடியாது என்றார்.
மேலும் அவர், ''இந்த இடத்தில் பல்வேறு அடுக்குகளில் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த பிணங்கள் எந்த காலகட்டத்தில் புதைக்கப்பட்டன என்பது தெரியவில்லை. இவற்றை விரிவாக ஆய்வு செய்த பின்னரே அது குறித்து தெரியவரும்" என்றார்.
புதைக்கப்பட்டவர்கள் யார்?
இதற்கிடையே, கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இந்த பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தமிழர்கள் கூறியுள்ளனர். இது குறித்து மன்னார் மாவட்ட கத்தோலிக்க பிஷப் ராயப்பு ஜோசப் கூறுகையில், ''இந்த மக்களை யார் கொலை செய்தார்கள் என தெரியவில்லை. இந்த பகுதியை நீண்ட காலமாக ராணுவத்தினர் தான், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இது குறித்து நிச்சயமாக விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்தார்.
காவல்துறை மறுப்பு
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அந்நாட்டு காவல்துறை செய்தி தொடர்பாளர் அஜித் ரோகனா, ''இந்த பகுதியை 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த உடல்களும் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு முன்பே, புதைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் காணாமல் போயுள்ளனர். எனவே, இது குறித்து விசாரணை நடத்தப்படும்" என்றார்.
பிணக்குவியல்
இலங்கையில் போர் முடிவுற்று 4 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையில், முதல் முறையாக பெரிய அளவிலான பிணக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.