இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது: அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
''இலங்கையில் வாழும் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது குறித்து இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ கட்டளையிட முடியாது. இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக்குழுதான், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதித்து இறுதி முடிவை எடுக்கும்.
இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல், இலங்கையிலுள்ள மாநிலங்களுக்கான அதிகார பகிர்விலும் இந்தியா தலையிடக் கூடாது.
1987ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் 13வது சட்டத்திருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும் அது, இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று. எனவே, அது சட்டப்படி செல்லுமா என்பது கேள்விக்குரியதாகும்'' என்றார்.
இந்திய பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்தபோது, இலங்கையில் 13வது சட்டத்திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.