பிரபாகரனை வீழ்த்த ‘விதவிதமான’ பூஜைகள் செய்த ராஜபக்சே... பீதி கிளப்பும் சிங்கள ஜோதிடர்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வீழ்த்த, முன்னாள் அதிபர் ராஜபக்சே பல்வேறு விதமான பூஜைகளை செய்தார் என்று இலங்கையைச் சேர்ந்த ஜோதிடர் ஆரியரத்ன கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இலங்கையில் நடந்த விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையேயான போரை நிறைவு செய்து கொடுக்குமாறு கூறி தனது இரண்டு மாடி வீட்டில் மேற்கொண்ட காளி பூஜை மற்றும் இதுவரை தான் செய்த பூஜை வழிபாடுகள் குறித்து இலங்கை ஜோதிடர் டப்ல்யூ.டீ.ஆரியரத்ன பேட்டி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக இலங்கையைச் சேர்ந்த உதயன் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில்:
ரத்தபூஜை...
பத்ரகாளி மற்றும் கல்லரை காளி அம்மா இருவரையும் வணங்கி கொண்டு தான் நான் இந்த பூஜையை ஆரம்பித்தேன். விடுதலைப் புலிகளின் தலைவர் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கல்லரை காளி அம்மாவுக்கு ரத்த பூஜை கொடுக்கும் போது, நான் நாட்டு மக்களுக்காக பால் பூஜை கொடுத்தேன். கல்லரை காளி அம்மாவுக்கு ரத்த பூஜை தான் மிகவும் பிடிக்கும். எனினும் நான் அதற்கு பழகவில்லை.
பழ பூஜை...
நான் பால் பூஜையை வித்தியாசமான முறையில் வழங்கி என் கோரிக்கையை கூறினேன். கல்லரை காளி அம்மாவிடம் நல்லது ஒன்றை எதிர்பார்க்கவும் முடியாது. கெட்ட விஷயங்கள் மாத்திரமே. ஸ்ரீ பத்திரகாளி அம்மாவுக்கு நான் பழ பூஜை ஒன்றை கொடுத்தேன். சிறிது சிறிதாக பிரபாகரனின் கட்டுகள் உடைக்கப்பட்டன. இந்த நாட்டில் போர் நிறைவடைந்து நாட்டிற்கு சமாதானம் ஏற்படும் வரையில், அசைவ உணவுகளை தவிர்த்து பெற்றோர் மரணித்திருந்தாலும் அவற்றில் கலந்து கொள்ளாமலும், பிரம்ம வாழ்க்கை வாழ்வதாக பத்திர காளி அம்மா முன் வாக்குறுதியளித்தே இந்த வேலையை ஆரம்பித்தேன்.
துக்க நிகழ்ச்சியில்...
அந்த வாக்குறுதியை நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரையில் நிறைவேற்றினேன். அந்த காலப்பகுதியில் எனது அப்பா மற்றும் அண்ணன் மரணமடைந்தனர். அந்த இறுதிச் சடங்கில் கூட நான் கலந்து கொள்ளவில்லை. எனது இரண்டு மகள்களின் திருமணங்களில் கலந்து கொள்ள முடியவில்லை.
ராஜபக்சேவுக்கு உதவி...
எனினும் எனது வாழ்க்கையில் நான் நினைக்காத பலவற்றை பெற்றேன். பின்னர் அந்த இடத்திற்கு அருகிலே இரண்டு மாடி வீட்டை விலைக்கு வாங்கினேன். அப்போதுதான் ராஜபக்சே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகினார். கடந்த காலங்களில் என்னை மரணத்தில் இருந்து காப்பாற்றியதனை மனதில் வைத்து கொண்டு, அதுவரையில் நாட்டில் இருந்த பலமான தலைவராக ராஜபக்சேவை ஜனாதிபதியாக்குவதற்கு உதவி செய்வதற்கு ஆயத்தமாகினேன்.
போரை நிறைவு செய்ய...
எனது சோதிட அறிவு மற்றும் தாயத்து மந்திரங்களில் ராஜபக்சேவை வெற்றி பெற செய்வதற்கு நான் பெரிய விஷயம் ஒன்றை செய்தேன். அதனை செய்து ராஜபக்சேவை ஜனாதிபதியாக்கிய பின்னர் அவரை சந்திக்க அலரி மாளிகைக்கு சென்றேன். அவர் என்னை மிகவும் நல்ல விதமாக வரவேற்றார். அதன் பின்னர் 2006ஆம் ஆண்டு போரை நிறைவு செய்வதற்கு ராஜபக்சே மனிதாபிமான செயற்பாடுகளை மேற்கொண்டார்.
புண்ணிய செயல்...
போரின் போது அதிக ரத்தம் சிந்தாமல் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துமாறு காளி அம்மாவிடம் மீண்டும் நேர்ந்து கொண்டேன். அப்படி நடந்தால் நான் வசிக்கும் இந்த இரண்டு மாடி வீட்டை காளி அம்மாவுக்கு பூஜை செய்து ஒரு கோயிலாக மாற்றுவதாக வாக்குறுதியளித்தேன். அனைத்து சிங்கள யாத்ரீகர்களையும் ஒரு இடத்திற்கு அழைத்து வந்து பெரிய அளவிலான மத புண்ணிய செயலைச் செய்வதாகவும் வாக்குறுதியளித்தேன்.
சாந்தி பூஜை...
அத்துடன் பௌத்த மக்களுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என புத்தர் வழிபாடு மேற்கொள்வதாகவும், வாக்குறுதியளித்தேன். அவ்வாறு வாக்குறுதியளித்து எங்கள் வேலைகளை மேற்கொண்டோம். அதனை தொடர்ந்து போர் நிறைவடைந்தது. காளி அம்மாவுக்கு வாக்குறுதியளித்தது போல 2010ஆம் ஆண்டு அக்டோபர் 16, 17, 18 ஆகிய நாட்களில் பெலியத்தை டீ.ஏ.ராஜபக்ச மைதானத்தில் பெரிய அளவிலான சாந்தி பூஜை ஒன்றை செய்தோம்.
புத்தர் சிலைகள்...
அனைத்து மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலாசார நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன. தானங்கள் வழங்கப்பட்டன. இவை எனது தனிப்பட்ட செலவுகளாகும். 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03ம் தேதி எனது வீட்டை கடவுளுக்கு பூஜையிட்டேன். பௌத்த மக்களுக்காக எண்பத்து நாலாயிரம் புத்தர் சிலைகளுக்கான பூஜை வழிப்பாடு வாக்குறுதியையும் நிறைவேற்றுவதற்காக புத்தர் ஜெயந்தியை அண்மித்த சந்தர்ப்பத்தில் புத்தர் சிலைகளுக்கான வேலைகளை ஆரம்பித்தேன்.
கற்தூள்கள் மூலம்...
முதலில் களனி விகாரையில் ஆரம்பித்து இரண்டாயிரத்து 600 சிலைகளுக்கு பூஜையிட்டேன். மீண்டும் புத்தர் சிலை பூஜைகளை ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பித்து நாடு முழுவதும் 14 தானங்களை வழங்கினேன். மண்ணினால் செய்யப்பட்ட சிலைகளை நாங்கள் செய்யவில்லை. இரசாயனத்தில் கற்தூள்கள் பயன்படுத்தி செய்யப்பட்ட சிலைகளையே செய்து பூஜை செய்தோம்.
ராஜபக்சேவின் தோல்வி...
நேர்ந்து கொண்ட அரசியல்வாதிகள் ஒருவரும் உதவிக்கு வரவில்லை. என்னிடம் இருந்த பணமும் காலியாகி விட்டது. வீட்டை வங்கியில் அடகு வைத்து ரூ. 90 லட்சம் கடன் பெற்றேன். கோவிலுக்கான வேலைகளைச் செய்தேன். ஆனால் முடியவில்லை. இந்த சமயத்தில் மக்கள் செல்வாக்கையும் ராஜபக்சே இழக்க ஆரம்பித்தார். ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார் என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். தனது பேட்டியில் மேலும் பல சம்பவங்களையும் அவர் விவரித்துள்ளார்.