ஸ்ரீ ராமபிரானுக்கு அணில் உதவியது போல இலங்கை தமிழர்களுக்கு உதவியாக இருப்பேன்: அண்ணாமலை
யாழ்ப்பாணம்: இலங்கையில் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக எந்த மீனவரும் கடல் எல்லையை தாண்டி வருவது இல்லை; சில நேரங்களில் தவறுதலாக வந்துவிடுகின்றனர்; இந்த பிரச்சனைக்கு கட்டாயம் தீர்வு காண்போம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வெயில் சுட்டெரித்தாலும் 5 நாட்களுக்கு ஜில் மழை இருக்காம் - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு
இலங்கையில் மலையகம் மற்றும் ஈழப் பகுதிகளில் அண்ணாமலை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் மலையகத்தில் மே தின நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் இன்று யாழ்ப்பாணம் சென்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.
யாழில் அண்ணாமலை
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் தனியார் ஹோட்டல் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த ஆலோசனைக்குப்பின் யாழ்ப்பாணம் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கை அரசாங்கத்துக்கு நிதி உதவி, எரிபொருள் உதவி உள்ளிட்டவைகளை இந்தியா வழங்கி வருகிறது.
13-வது சரத்து அமலாகும்
இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள 13-வது சரத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இதனைத்தான் அண்மையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி இருந்தார். 13-வது அரசியல் சாசனம் விரைவில் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
இலங்கை அகதிகள்
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை விரைவில் முடிவுக்கு வர இறைவன் அருள்புரிய வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் இலங்கையில் இருந்து அகதிகளாக வருகை தருகின்றனர். அப்படி அகதிகளாக வருகிறவர்கள் மீது கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை மக்களை தொப்புள் கொடி உறவுகளாக, அன்புடனும் ஆதரவுடனும் நேசக்கரம் நீட்டி வரவேற்கிறோம்.
மீனவர்கள் பிரச்சனை
தென்னிந்திய மீனவர்களால் இலங்கை வட பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தாலும் இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்க வேண்டும் என்பதற்காக வருவது இல்லை. ஏதோ ஒரு சில தவறுகளால் வந்துவிடுகின்றனர். இது கட்டாயமாக தீர்க்கப்பட வேண்டிய விவகாரம்தான். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுகக்ப்படும். இவ்வாறு அண்ணாமலை கூறினார். மேலும் ஸ்ரீ ராமபிரானுக்கு அணில் உதவியது போல இலங்கை தமிழர்களுக்கு இந்த அண்ணாமலை உதவியாக இருப்பேன் என்றும் அண்ணாமலை கூறினார்.