பழங்குடியினர் நலனில் அலட்சியம்.. பற்றி எரிந்த ஆஸ்திரேலியா நாடாளுமன்ற கட்டிடம்.. பரபரப்பு!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர் உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் அந்நாட்டின் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகெங்கும் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரின் நலனும் உரிமைகளும் ஒடுக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவிலும் கூட பழங்குடியினரின் தங்கள் உரிமைக்காரிகளுக்காகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மற்ற நாடுகளிலும் இதே நிலைமை தான். பழங்குடியினர் நலனைப் பாதுகாக்கா வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், உலக நாடுகள் இதைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.
இன்னும் இரண்டரை ஆண்டுகாலம்! 2024 தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமிட்டு காங்கிரஸ் புத்தாண்டு வாழ்த்து!
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடியினருக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அந்நாட்டு அரசு இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்நாட்டில் வசிக்கும் பழங்குடியின அமைப்புகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பழங்குடியினர் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் Aboriginal Tent Embassy என்ற நிரந்தர போராட்ட களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.
பற்றி எரிந்த நாடாளுமன்றம்
இதையொட்டி பழங்குடி அமைப்பினர் அங்கு ஒன்று கூடி, போராட்டம் நடத்தினர், ஆஸ்திரேலியாவில் தங்களுக்கான உரிமைகள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருவதாகவும் அரசும் இதற்கு ஆதரவாக இருப்பதாகவும் பழங்குடியினர் குற்றம்சாட்டினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் திடீரென பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்தத் தீ விபத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.
பழைய நாடாளுமன்ற கட்டிடம்
ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்ற கட்டிடம் கொழுத்துவிட்டு எரியும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இந்தக் கட்டிடத்தில் தான் செயல்பட்டு வந்தது. கடந்த 1998இல் தான் அருகிலேயே புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு, நாடாளுமன்ற நடவடிக்கைகள் அங்கு மாற்றப்பட்டன. அதன் பிறகு இந்த கட்டிடம் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள் கண்டனம்
அருங்காட்சியகத்தில் இருந்த ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆஸ்திரேலியாவில் பெரும்பாலும் போராட்டங்கள் அமைதியாகவே நடைபெறும், போராட்டத்தின் சமயத்தில் பொது உடைமைகளுக்கு தீ வைப்பு எல்லாம் அரிதாகவே இருக்கும். ஆனால், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதற்கு அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டம் தெரிவித்துள்ளனர்.