ஆஸ்திரேலியாவில் கந்த சஷ்டி.. சூரபத்மனை சம்ஹாரம் செய்த சிட்னி முருகன்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்றது. சிட்னியில் நடைபெற்ற விழாவில் சூரபத்மனை சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஆசியாவிலேயே மிகச் சிறிய நிலப்பகுதியான ஆஸ்திரேலியா பலதரப்பட்ட மொழிகள், மற்றும் பல்வேறு இன, மத, கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. குறைந்தது நூறு நாட்டை சேர்ந்த பல்வேறு இன மக்கள் வசிக்கும் அந்த நாட்டில் நூற்றுக்கும் மேலான மொழிகள் பேசப்படுகின்றன.
அந்த நாட்டைப் பொறுத்தவரை அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்ஒருவரும் தங்களுடைய மொழிகளில் உரையாடி, தங்களுடைய கலாசாரத்தை கடைப் பிடித்துக் கொண்டும், தங்களுடைய நாட்டின் தெய்வ வழிபாட்டையும் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதனால்தான் அங்கு உள்ள தமிழர்களால் தம்முடைய மொழி, கலாசாரம் மற்றும் மத வழிபாட்டையும் தொடர்ந்து கொண்டு இருக்க முடிகின்றது.
அண்ணாமலையே ஷாக் ஆயிட்டாருங்க.. கட்டிப் பிடித்து முத்தம்! தேவர் நினைவிடத்தில் கூவிய ஆர்கே சுரேஷ்!
'நியூ சவுத்வேல்ஸ்' மானிலத்தின் தலைநகரமான 'சிட்னியில்' 'மேஸ்ஹில்ஸ்' (Mays Hill) எனும் இடத்தில் சிட்னி முருகன் என்ற பெயரில் முருகனுக்கு ஆலயம் உள்ளது. குன்றுதோறும் குமரன் என்பதினால் அவர் எழுந்தருளும் இடங்கள் பெரும்பாலும் மலைகளில்தான் அமைந்து உள்ளன. சிட்னி முருகனும் 'மேஸ்ஹில்ஸ்' என்ற மலைப் பகுதியில்தான் உள்ளது. அந்த இடத்தை வைகாசிக் குன்று என அழைக்கின்றனர்.
சிட்னி முருகன் கோவில்
சிட்னியில் முதன் முதலாக 'சிவஜோதி தணிகை ஸ்கந்தகுமார்' என்ற ஸ்ரீலங்க நாட்டு பிரஜையினரால்தான் முருக வழிபாடு துவங்கியது. அவர்தான் பஞ்சலோகத்திலான சிலையை (தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம் மற்றும் இரும்பு போன்றவை கலந்த பஞ்சலோகம்) 1983 ஆம் ஆண்டில் எடுத்து வந்து தன் வீட்டில் வைத்துக் கொண்டு அதற்கு பூஜை செய்யத் துவங்கினார். மேலும் அந்த பூஜையில் கலந்து கொள்ள அவர் தனது நண்பர்களையும் அழைத்தார்.
முருகனுக்கு ஆலயம்
1986 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் தன் குடும்பத்தினருடன் அந்த சிலையை எடுத்துச் சென்று 'ஸ்டிராத்பீல்ட்' (Strathfield Girls High School) பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இருந்த பொது அறை ஒன்றில் வைத்து அதற்கு பூஜை செய்து வழிபட ஏற்பாடு செய்தார். இன்றும் அந்த சிலை ஸ்தாபனம் செய்யப்பட்டு உள்ள அந்த உயர்நிலைப் பள்ளியே தமிழர்கள் ஒன்று கூடும் இடமாக அமைந்து உள்ளது. 1985 ஆம் ஆண்டு சைவ மன்றம் என்ற அமைப்பை சார்ந்தவர்கள் பத்து வருட காலம் கஷ்டப்பட்டு சிட்னி முருகன் என்ற ஆலயத்தைக் கட்டினார்கள்.
வைகாசி குன்று
1990 ஆம் ஆண்டில் சாலை போக்குவரத்து இலகாவிடம் இருந்தும் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இடையே அமைந்து இருந்த ஒரு இடத்தை சைவ மன்றம் விலைக்கு வாங்கியது. 'ஸ்டிராத்பீல்ட்'டில் இருந்த பள்ளியில் இருந்து சுமார் பத்து கிலோ தொலைவில் இருந்த 'மேஸ் மலைப்' (Mays Hill) என்ற இடத்தில் உள்ள அந்த ஆலயத்தின் மூன்று பக்கங்களிலும் எந்த குடியிருப்புக்களும் கிடையாது.
மேஸ் மலை
ஆரம்பத்தில் அந்த இடத்தை வாங்கிய அமைப்பினர் அங்கு கட்டிடம் கட்டி அதை முருகனுக்கு விழாக்கள், ஆராதனைகளை செய்யவும், கலையரங்கமாகவும் பயன்படுத்த திட்டமிட்டு இருந்தார்கள். 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 'முருகன் ஆலயம்' மற்றும் 'தமிழ் கலாச்சார மையத்தை' அமைக்க அந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர். 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிட்னியின் மேற்குப்புறத்தில் இருந்த அந்த 'மேஸ் மலையில்' முருகன் ஆலயக் கட்டிடப் பணி துவங்கியது.
முருகன் ஆலய கும்பாபிஷேகம்
நியூ சவுத்வேல்ஸை சேர்ந்த சைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு மாபெரும் அந்த ஆலயத்தைக் கட்டி முடித்தனர். அந்த ஆலயத்தில் இருந்த முன்று பிரிவுகளில் மத்தியில் முருகப் பெருமானும் மற்ற இரண்டிலும் சிவன் மற்றும் அம்பாள் சிலைகள் நிறுவப்பட்டன. மூல சன்னதியில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டார். 1999 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பதினேழாம் தேதி அன்று ஆலயத்தில் 'சிட்னி' முருகப் பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தேறியது. அது முதல் குன்றில் வாழ்ந்து கொண்டிருந்த முருகப் பெருமான் 'மேஸ்மலைப்' பகுதியின் குன்றிலும் வசிக்கத் துவங்கினார்.
கந்த சஷ்டி சூரசம்ஹாரம்
இந்த ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு உகந்த முக்கிய விழாக்கள் நடைபெறுகின்றன. வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழாவும் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. யானை முகத்தோடும், சிங்க முகத்தோடும் வந்த அசுரனை சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான். கந்த சஷ்டியை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் இன்று சிட்னி முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தை கண்டு தரிசனம் செய்தனர்.