தமிழகத்திலிருந்து மலையாள நிறுவனங்களையும் மலையாளிகளையும் வெளியேற்றுவோம்: மணியரசன் எச்சரிக்கை
சென்னை: முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்க விடமால் கேரளா அத்துமீறி நடந்துகொண்டால் தமிழகத்தில் இருந்து மலையாள நிறுவனங்களையும் மலையாளிகளையும் வெளியேற்றும் போராட்டம் உருவாகும் என்று தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
'முன்னறிவிப்பின்றியும் முன் அனுமதி கோராமலும் கேரளத்தின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பீர்மேடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் பிஜூ குஞ்சு மோள் 17.11.2014 அன்று மாலை கேரள ஊடகத்துறையினர் உள்ளிட்ட ஒரு கும்பலை அழைத்துக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையை சோதனை செய்ய நுழைந்துள்ளார்.
பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள அவ்வணையில் அப்போதிருந்த கண்காணிப்புப் பொறியாளர் ராஜேஷ் தாஸ், செயற்பொறியாளர் ஏ. மாதவன் உள்ளிட்டோர், சட்டப்பேரவை உறுப்பினரை அனுமதித்துவிட்டு, அவரால் அழைத்து வரப்பட்ட ஊடகத் துறையினரிடம் "முன் அனுமதி பெறாமல் உங்களை அணை மேல் செல்ல அனுமதிக்க முடியாது" என்று கூறியுள்ளனர்.
உடனே மலையாள ஊடகத்துறை ஆட்கள் முரட்டுத்தனமாக செயற்பொறியாளர் மாதவனைக் கீழே தள்ளிவிட்டு, உள்ளே புகுந்துள்ளனர். அப்போது அங்கு அணைக்காவல் பணியில் இருந்த கேரளக் காவல் துறையினரிடம் தன்னை வன்முறை மூலம் தள்ளிவிட்டு, சட்ட விரோதமாக உள்ளே நுழைகின்ற ஊடகத்துறையினரைத் தடுக்குமாறும், நடவடிக்கை எடுக்குமாறும் செயற்பொறியாளர் மாதவன், கேரளக் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்த போது அவர்கள் "எங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று கூறி நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டனர்.
சட்டப்பேரவை உறுப்பினர் குஞ்சுமோளும் மற்றவர்களும், தடி கொண்டு சிற்றணையின் வெளிப்பகுதியைக் குத்தி சேதப்படுத்தியுள்ளனர். உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழகம், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க விடாமல் தடுப்பதற்கே இந்த அத்துமீறலிலும், வன்முறையிலும் மலையாளிகள் இறங்கியுள்ளனர்.
தமிழகத் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் இந்நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டுக் கேரளத் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாதுகாப்பட்ட அணைப் பகுதியில் முன்அனுமதி பெறாமல் சி.பி.ஐ. கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் பிஜூ குஞ்சு மோள் மற்றும் ஊடகத் துறையினர் உள்ளிட்ட ஆட்களுடன் உள்ளே நுழைந்ததற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் செயற்பொறியாளர் மாதவன் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத கேரளக் காவல்துறையினர் பற்றியும் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலை தொடர்ந்தால், கேரள அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர நேரிடும் என்றும், முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பிற்கு கேரளக் காவல் துறையை நீக்கிவிட்டு, நடுவண் தொழில் துறைப் பாதுகாப்புப் படையை நிறுத்தக் கோரிக்கை வைக்க நேரிடும் என்றும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
தலைமைச் செயலாளர் வர்கீஸ் கூறியிருப்பது தமிழக அரசின் கருத்தாகும். வன்முறையில் ஈடுபட்ட மலையாள முரடர்களைத் தடவிக் கொடுப்பது போல் தலைமைச் செயலாளர் மடல் உள்ளது.
முன் அனுமதி பெறாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்த (Trespass) குற்றத்திற்காக சட்டப்பேரவை உறுப்பினர் பிஜூ குஞ்சுமோள் மீதும், அதே அத்துமீறலுக்காகவும் செயற்பொறியாளர் மாதவன் மீது வன்முறை ஏவியதற்காகவும், மலையாள ஊடகத்துறையினர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழகத் தலைமைச் செயலாளர் கேரளத் தலைமைச் செயலாளரைக் கோரி இருக்க வேண்டும்.
அணையின் காவலுக்குக் கேரளக் காவல்துறைக்கு மாற்றாக நடுவண் தொழில்துறைப் பாதுகாப்புப் படையினரைக் கோர நேரும் என்று கூறியிருப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.
2006 நவம்பர் 9, 10 நாள்களில் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு நடத்திய இந்திய அரசின் உள்துறையைச் சேர்ந்த நுண்ணறிவுப் பிரிவினர் (Intelligence Bureau - MMA) தமிழ்நாடு அரசுக்கு அளித்த 11 பரிந்துரைகளில் எட்டாவது பரிந்துரையாக, அணைப் பாதுகாப்பிற்குக் கேரளக் காவல்துறைக்கு மாற்றாக நடுவண் தொழில்துறைப் பாதுகாப்பு படையினரை நிறுத்தத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதுவரை, இப்பரிந்துரை தொடர்பாகத் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை விளக்க வேண்டும்.