லேப்டாப் திருட்டை தடுத்த வாட்ச்மேன் கொலை - 2 ஆண்டுகளுக்கு பின் கொலையாளிகள் சரண்!
நாமக்கல்: நாமக்கல்லில் லேப் டாப் திருட்டை தடுத்த அரசு பள்ளி வாட்ச்மேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் அருகிலுள்ள நல்லிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். ஜெயக்குமாருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
இந்நிலையில் தனது தாயார் பத்மாவதியுடன் வசித்து வந்தார் ஜெயக்குமார். கடந்த 2013 நவம்பர் 22 ஆம் தேதி இரவு பள்ளிக்கு சென்ற ஜெயக்குமார் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
ஜெயக்குமாரை யார் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து நாமக்கல் நகர போலீஸார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் நாமக்கல் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் முன் சரணடைந்தார். அவர் மேலும் ஜெயக்குமாரை அடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து குமார் நாமக்கல் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.
குமாரை கைது செய்த காவல் ஆய்வாளர் பாஸ்கரன் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலை நடந்த அன்று கொசவம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்தன் என்பவருடன் அப்பள்ளியில் வைக்கபட்டிருந்த லேப்டாப்களை திருடலாம் என்ற திட்டத்தில் இருவரும் மது அருந்திவிட்டு போதையில் சென்றுள்ளனர்.
அப்போது தூங்கிக் கொண்டிருந்த வாட்ச்மேன் ஜெயக்குமார் விழித்து பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். அவரது வாயை பொத்தி, அங்கிருந்த பாட்டிலால் ஜெயக்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், மண்டை உடைந்து இரத்தம் வெளியேறிய ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு லேப்டாப் திருடும் முயற்சியை கைவிட்டு விட்டு இருவரும் தலைமறைவாகிவிட்டோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து, கொசவம்பட்டியை சேர்ந்த அரவிந்தையும் போலீஸார் கைது செய்தனர்.