பிளாஸ்டிக்கை ஒழிக்க போராடிய இளைஞர் தற்கொலை… 127 கோடி மக்களுக்காக சாகிறேன்… வீடியோ பதிவில் உருக்கம்
தஞ்சை: தமிழகத்தில் இருந்து பிளாஸ்டிக்கை ஒழிக்க போராடிய ஜவகர் என்ற இளைஞர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த குமரன் மகன் ஜவகர். 20 வயதான இவர், பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று தனி நபராக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு சாலையில் அமர்ந்தும் செல்போன் டவரில் ஏறியும் பிளாஸ்டிக்கை ஒழிக்க போராட்டம் நடத்தினார். ஆனால் அரசு ஒன்றும் கண்டு கொள்வதாக இல்லை. பிளாஸ்டிக் ஆபத்தானது என்று வாய்மொழியாக மட்டுமே அரசு சொல்லி வருகிறதே தவிர, தீவிரமான முயற்சிகளை பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக எடுக்கவில்லை என்று ஜவகர் கருதியுள்ளார். இதனால் மனம் உடைந்து போன அவர், கடந்த 10ம் தேதி ஒரு வீடியோவில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கூறியதோடு, பிளாஸ்டிக் ஒழிப்பிற்காகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் உருக்கமாக பேசியுள்ளார்,
"127 கோடி மக்கள் நன்றாக வாழ பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் யானை பசிக்கு சோளப்பொறி போல நடந்து கொள்கிறது. சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டும். அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று வீடியோ பதிவை வெளியிட்டு விட்டு, புது ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்துள்ளார் ஜவகர். அவரது உடல் கண்டிதம்பட்டு பொட்டவாச்சாவடி அருகே கரை ஒதுங்கியுள்ளது. 20வயது இளைஞனின் தற்கொலையால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.