திருச்செங்கோடு பெண் தொழிலதிபர் கடத்தி சித்ரவதை; நகை பறிப்பு - 3 பேர் கைது
சென்னை: திருச்செங்கோட்டில் பெண் தொழிலதிபரை மயக்க ஊசி போட்டு கடத்தி 16 பவுன் நகையை பறித்த நர்ஸ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரூ. 20 கோடி கேட்டு மிரட்டிய கார் டிரைவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் இயங்கிவரும் ரிக் வாகனம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பஷீர். இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து 43 வயதான அவரது மனைவி ஷர்மிளாபானு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிற்பகல் வேலூர் சாலையில் உள்ள தனது வீட்டுக்கு உணவருந்த காரில் சென்றுவிட்டு, மாலை 4 மணியளவில் மீண்டும் தொழில் நிறுவனத்துக்கு வந்து கொண்டிருந்தார். கார் வழக்கமான பாதையில் செல்லாமல் பாதை மாறிச் செல்வதைக் கவனித்த அவர், ஓட்டுநர் அக்பர் அலியிடம் காரணத்தை கேட்டார்.
போக்குவரத்து நெரிசலாக உள்ளதால், மாற்றுப் பாதையில் செல்வதாகத் தெரிவித்துள்ளார். அங்கு இரண்டு இளைஞர்கள், பர்தா அணிந்த ஒரு பெண் என 3 பேரை ஓட்டுநர் அக்பர் அலி காரில் ஏற்றினார். பிறகு ஷர்மிளாவுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.
மர்ம நபர்கள் ஷர்மிளா பானுவிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தராவிட்டால் குழந்தைகளை கடத்தி கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். அதனால், அவர் பணம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அதற்கு கால அவகாசமும் கேட்டுள்ளார். அதையடுத்து அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் 15 பவுன் நகையை பறித்துள்ளனர்.
போலீசில் புகார் செய்தால் உன்னையும், மகன், மகள்களையும் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். தொடர்ந்து, திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே காரில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்றனர். அங்கிருந்து அரை மயக்கத்துடன் காரில் கம்பெனிக்கு சென்ற ஷர்மிளாபானு, தன்னுடைய இளைய சகோதரர் பாபுவிடம் நடந்ததை கூறினார். இதனையடுத்து ஷர்மிளாவை அவரது குடும்பத்தினர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசில் ஷர்மிளாபானுவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சேலம் சின்னம்மாபாளையத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை நர்ஸ் யாஸ்மின் 22, மயக்க ஊசி போட்டு கடத்தலுக்கு உதவியது தெரியவந்தது.
யாஸ்மின் கணவர் பாசில் 24, யாஸ்மினின் தம்பி ஆகியோர், டிரைவருடன் சேர்ந்து கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. வியாழக்கிழமையன்று இரவு ஆட்டையாம்பட்டி அருகே 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு திட்டம் தீட்டிய டிரைவர் அக்பர் அலி தலைமறைவாகி விட்டார்.
மாயமான பிடிப்பதற்காக திருச்செங்கோடு டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட யாஸ்மின் சேலம் பெண்கள் சிறையிலும், மற்ற இருவரும் சேலம் மத்திய சிறையிலும் இன்று அதிகாலையில் அடைக்கப்பட்டனர்.