தொடரும் முதியவர்கள் கொலைகள்... கிடைக்காமல் போலீசார் திணறல்
சென்னை: சென்னையில் முதியவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை துப்பு துலங்காமல் இருப்பது சென்னை காவல்துறைக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
சென்னை நகரில் தனியாக இருக்கும் பெண்கள் நகைக்காகவும், பிற காரணங்களுக்காகவும் கொலை செய்யப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
சமீப காலத்தில் நடந்த 4 பெண்களின் கொலையில் இதுவரை துப்பு துலங்காதது காவல்துறையை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. அம்பத்தூர், மெளலிவாக்கத்தில் இரு வயதான பெண்கள் கொலை செய்யப்பட்டு 5 நாட்களாகி விட்டன. இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை.
அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் மட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் 4 கொலை வழக்குகள் தேங்கிப் போயுள்ளன.
பூந்தமல்லியில் ஆகஸ்ட் 11ம் தேதி 62 வயது பாபு, 53 வயது சாந்தி கொலை செய்யப்பட்டனர். இதில் சில துப்புக்கள் கிடைத்துள்ள போதிலும் யாரும் கைது செய்யப்படவில்லை.
அதேபோல் அலமேலு அம்மாள் என்பவர் ஆகஸ்ட் 12ம் தேதி கொல்லப்பட்டார். அதிலும் துப்பு சிக்கவில்லை.
மார்ச் 5ம் தேதி 68 வயது ஜோசபின் திருமுல்லைவாயல் தென்றல் நகரில் கொல்லப்பட்டார். இக்கொலையிலும் கொலையாளி பிடிபடவில்லை.
ஏப்ரல் 7ம் தேதி 55 வயது நடராஜன் என்பவர் கொலை செய்ய்பட்டார். அவர் குத்திக் கொல்லப்பட்டார். இதிலும் யாரும் சிக்கவில்லை. இவர் வாட்ச்மேன் ஆவார். இந்த வழக்கும் தேங்கிப் போய் நிற்கிறது.
கொலைகள் தொடர்கின்றன.. கொலையாளிகள்தான் இதுவரை சிக்காமல் தப்பி வருகிறார்கள். இதனால் போலீசார் திணறலுக்கு ஆளாகியுள்ளனர்.