திமுக நிர்வாகியை பெண்ணோடு படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது
தென்காசி: கடையநல்லூர் திமுக நிர்வாகியை பெண்ணோடு சேர்த்து படம் எடுத்து மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து பாண்டியன். திமுக நெல்லை மாவட்ட அவைத் தலைவராக உள்ளார். மர வியபாரம் செய்து வரும் அவர் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவரிடம் கேரளாவில் உங்களுக்கு தெரிந்த நபர்கள் மூலமாக தேக்கு மரங்கள் இருந்தால் சொல்லுங்கள் மொத்தமாக வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தினத்தில் தனக்கு வேண்டப்பட்ட நபர் புனலூரில் இருப்பதாகவும், அவர் மூலம் மரம் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார் ரவிசங்கர். அதன்படி கடந்த சனிக்கிழமை பாண்டியனை குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார் ரவிசங்கர்.
முத்து பாண்டியனும் விடுதிக்கு வந்துள்ளார். அப்போது கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அதன் பின்பு அவர்கள் முத்து பாண்டியனோடு மிகவும் நெருக்கமாகியுள்ளனர். அப்போது அவர்கள் ஒரு பெண்ணை முத்துபாண்டியனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அந்த பெண்ணுடன் இருநாட்கள் முத்து பாண்டியன் தங்கியுள்ளார்.
முத்துபாண்டியனும், அந்த பெண்ணும் நெருங்கி இருப்பது போல் புகைப்படங்களையும், வீடியோவையும் செல்போனில் எடுத்துள்ளனர். கேரள புள்ளிகள் பின்னர் மர வியாபாரம் சம்பந்தமாக ஓரிரு நாளில் பணத்தோடு கேரளாவுக்கு செல்வோம் என்று கூறிவிட்டு ஊருக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் கேரள புள்ளிகள் முத்துபாண்டியனுக்கு போன் செய்து நீங்கள் எங்களோடு இருந்த பெண்ணோடு உல்லாசமாக இருக்கும் படம், வீடியோ எங்களிடம் உள்ளது அதை வெளியிடாமல் இருக்க ரூ. 5 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அவரும் பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் பணத்தை புரட்டிக் கொடுக்க முடியாமல் முத்துபாண்டியன் திணறியுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டுக்கும் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் திமுக புள்ளிகள் சிலருக்கும் தெரிய வந்துள்ளது. நேற்று ரவிசங்கர் சம்பந்தப்பட்ட கேரளா நபர் உள்ளிட்டவர்கள் குற்றாலம் வந்துள்ளனர்.
அப்போது அவர்களை அலைபேசியில் அழைத்த முத்துபாண்டி பணம் இருப்பதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அனைவரும் காரில் சென்றுள்ளனர். அப்போது அவரிடம் ரவிசங்கர் பணம் எங்கே என்று கேட்கவே அவர் பணமில்லை என்று சொல்ல அவரை வேறு ஒரு காரில் ஏற்றி அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அவரிடமிருந்து ரூ. 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு காரிலிருந்து குற்றாலம் செங்கோட்டை சாலையில் உள்ள பிரானூர் அருகே தள்ளிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முத்து பாண்டியன் குற்றாலம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜமால் தலைமையில் போலீசார் விரைந்து சென்று காரில் சென்றவர்களை விரட்டியுள்ளனர். அப்போது கேரள புள்ளி மட்டும் தப்பியுள்ளார். மற்றவர்கள் ஆன ரவிசங்கர், சுல்பி, சரவணகுமார், அன்புசெல்வன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து அவர்களது 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் அந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவத்திற்கு நெல்லை மாவட்ட திமுகவில் உள்ள கோஷ்டி பூசல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications