சென்னை: சாலை மறியலில் ஈடுபட்ட நர்சிங் மாணவிகள் 400 பேர் கைது
சென்னை: அரசு கல்லூரிகளில் படித்த நர்சிங் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவிகள் சுமார் 400 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நர்சிங் பயிற்சி பெறும் மாணவிகள் கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அரசு கல்லூரிகளில் படித்த நர்சிங் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும், ஓட்டுப் போடவாவது வெளியில் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பலக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முன்பு திடீரென 400 நர்சிங் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த 50-க்கும் மேற்பட்ட பெண் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், மாணவிகள், பெண் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களை போலீசார் தொடக்கூடாது என மாணவிகள் எச்சரித்தனர்.
இதனால் நர்சிங் மாணவிகளுக்கும், பெண் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், அதனைத் தொடர்ந்து மோதலும் ஏற்பட்டது. இதில் சில மாணவிகள் மயங்கி விழுந்தனர்.
பின்னர் நர்சிங் மாணவிகள் 400 பேரையும் போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினார்கள்.
இதேபோல், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் படித்து வரும் 500-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் பணிக்கு செல்லாமல் பயிற்சி பள்ளி உள்ளே உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications