சென்னையில் உள்ள 7 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்!
சென்னையில் இருக்கும் சிறந்த 7 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ சர்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் இருக்கும் சிறந்த 7 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ சர்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூர் காவல் வட்டத்தில் 18 காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சிறப்பாக செயல்பட்டதாக பட்டாபிராம், ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல், அம்பத்தூர் எஸ்டேட், நசரத்பேட்டை, குன்றத்தூர், எஸ்.ஆர்.எம்.சி ஆகிய 7 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக இன்னும் சில நாட்களில் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த சர்வதேச தரச் சான்றிதழ் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் பத்திரிக்கையாளர்களிடம் பேசி இருக்கிறார்.
பொதுமக்களின் புகார்களை 2 தினங்களில் விசாரணை செய்து தீர்வு காண்பது, புகார் பெட்டிகள் வைத்து அதில் பொதுமக்கள் சார்பில் போடப்படும் புகார்களை மீது வேகமாக நடவடிக்கை எடுப்பது, பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் உரையாடுவது, காவல் நிலையத்தை சுகாதாரமாக நிர்வாகிப்பது, வழக்கு ஆவணங்களை முறையாக பேணுதல், வழக்குகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 20 விதிமுறைகளை கடைபிடித்து வந்த காரணத்தால் இந்த சர்வதேச தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்த நிலையங்கள் முரையாக கண்காணிக்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.
3 ஆண்டுகளுக்கு இந்த தரச் சான்றிதழ் செல்லுபடியாகும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தர சான்று பெற சோதனை செய்யப்படும். இந்த 7 காவல் நிலையங்களுக்கு , தரச்சான்றிதழ் கிடைத்திருப்பதால் மற்ற காவல் நிலையங்களும் இந்த சான்றிதழ் பெறுவதற்க்காக முனைப்பு காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications