பத்திரப் பதிவுக்கு ரூ.5,000 லஞ்சம்: ஓய்வுபெற்ற சார்பதிவாளருக்கு 7 ஆண்டு சிறை
புதுச்சேரி: புதுச்சேரியில் சொத்துப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற சார்பதிவாளருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் சார்பதிவாளராகப் பணியாற்றி வந்தவர் குருபாதம். வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் தனது சொத்துப் பத்திரத்தை பதிவு செய்வதற்காக குருபாதத்திடம் மனு அளித்தார். அதற்கு ரூ.5 ஆயிரம் தந்தால்தான் பதிவு செய்வேன் என சார்பதிவாளர் குருபாதம் கூறியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 10.4.2008-இல் பன்னீர்செல்வத்திடமிருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சமாக குருபாதம் பெற்றாராம். இது தொடர்பாக பன்னீர்செல்வம் செய்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து குருபாதத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் பணியிலிருந்து குருபாதம் ஓய்வுபெற்று விட்டார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.வேல்முருகன், குற்றம்சாட்டப்பட்ட குருபாதத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும். ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.