சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு சம்பவம்:24 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த முக்கிய குற்றவாளி கைது
சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக முஷ்டாக் அகமது என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முஷ்டாக் அகமது 24 ஆண்டுகள் தேடுதலுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.10 லட்சம் பரிசு
குண்டை வெடிக்கச்செய்தது மற்றுமொரு குற்றவாளிக்கு இடமளித்தது என முஷ்டாக் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து தலைமறைவான முஷ்டாக் குறித்து தகவல் அளிப்போருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டு தீர்ப்பு
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பக 18 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2007ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
3 பேருக்கு ஆயுள் தண்டனை
குண்டு வெடிப்பு தொடர்பாக 11 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது 4 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
2 குற்றவாளிகள் மரணம்
மதுரையில் போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய இமாம் அலி என்பவர் கடந்த 2002ஆம் ஆண்டு பெங்களுரில் என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளியான பலானி பாபா என்பவர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களால் கொல்லப்பட்டார் என கூறப்படுகிறது.
224 பேரிடம் விசாரணை
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 431 சாட்சிகளில் 224 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 1994 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 1995ஆம் ஆண்டு விசாரணை தொடங்கியது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முஷ்டாக் சிபிஐ அதிகாரிகளால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார். உடனடியாக சென்னை அழைத்து வரப்பட்ட அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.