தற்காலிக டிரைவரால் தொடரும் விபத்துகளுக்கு முதல்வரே காரணம்: தொழிற்சங்க நிர்வாகிகள்
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தையடுத்து, தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
சென்னை: நான்காவது நாளாக தொடர்ந்து வரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால், தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகிறது. போதிய அனுபவம் இல்லாத தற்காலிக ஓட்டுநர்களால் விபத்துகள் அதிகளவில் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 13வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்து போக்குவரத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் நியமிகப்பட்டு அரசு பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இவற்களோடு அண்ணா தொழிற்சங்க ஊழியர்களும் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் 4வது நாளாக இன்று தொடரும் நிலையில், பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய பேருந்துகளால் தொடர்ச்சியாக சாலை விபத்துகள் நடந்துவருகின்றன.
பயணிகள் ஓட்டம்
ஆவடி பேருந்து நிலையத்தில் தற்காலிக ஓட்டுநர் பேருந்தை சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் பேருந்தை சுவற்றில் மோதியதால் பயணியகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் பணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பொதுமக்கள் மிகுந்த பீதிக்குள்ளாயினர்.
தற்காலிக ஓட்டுனர்
சென்னை சாந்தோமில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது மாநகர பேருந்து மோதியது. இதில், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற 18 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஓட்டியவர் தற்காலிக ஓட்டுனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்பாவி மரணம்
விருத்தாசலம் அருகே தற்காலிக ஓட்டுனர் ஓட்டிய பேருந்து மோதி 37 வயதான சியான் என்பவர் உயிரிழந்தார். மேலும் 7 வயது சிறுமி சாரா, சாமுவேல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் விபத்து
தற்காலிக ஓட்டுநர் மூலம் பண்ருட்டியிலிருந்து கடலூர் சென்ற அரசுப் பேருந்து கீழ்அருங்குணம் என்ற இடத்தில் வயலில் இறங்கி விபத்திற்குள்ளானது. இதில் யாருக்கும் காயமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்காலிக ஓட்டுநர்களால் ஏற்படும் பேருந்து விபத்துக்கு முதல்வரும் போக்குவரத்து அமைச்சருமே காரணம் என்று போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் புகார்
பணி நியமன சட்டத்துக்கு எதிராக முதல்வர், அமைச்சர் செயல்படுவதாக தொமுச நிர்வாகி நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார். அனுபவம் இல்லாத ஓட்டுனர்களை வைத்து பேருந்து ஒட்டியதே விபத்துக்கு கரணம் என்றும் நடராஜன் கூறியுள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இன்றோடு நான்கு நாட்கள் ஆகிறது.
விபத்துகள் தொடர்கதை
அரசு தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது. தற்காலிக ஓட்டுநர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்கள். இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதுவரை இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனியாவது அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம்.