டாக்டர் சத்யாவை பலாத்காரம் செய்ய முயற்சித்தார் கொலையாளி.. போலீஸ் புதுத் தகவல்!
சென்னை: டாக்டர் சத்யா கொலை வழக்கில் அவரது கணவர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் பலாத்கார முயற்சியில் கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் சத்யா குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 20ம் தேதி அன்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் எம்.எஸ் மேற்படிப்பு படித்து வந்த டாக்டர் சத்யா கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலை, கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள டாக்டர் சத்யா தங்கி இருந்த அறையில் இந்த படுகொலைச் சம்பவம் நடந்தது. இந்த கொலை வழக்கில் கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
டாக்டர் சத்யா கொலை செய்யப்பட்ட அறைக்கு அடுத்த அறையில் தங்கி இருந்த என்ஜினீயர் அரிந்தம் தேப்நாத்(வயது 22) என்ற வடநாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார்.அரிந்தம் தேப்நாத் திரிபுரா மாநிலம் அகர்தலாவைச் சேர்ந்தவர். டாக்டர் சத்யாவை கொலை செய்து விட்டு, அவரது செல்போனை, என்ஜினீயர் அரிந்தம் தேப்நாத் எடுத்துச் சென்று விட்டார். செல்போனுக்காக கொலை நடந்தது போன்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.
கணவர் சந்தேகம்
அதேநேரத்தில் டாக்டர் சத்யாவின் கணவர் டாக்டர் ஜேசுவோ, செல்போனுக்காக கொலை நடந்தது என்று சொல்வதை நம்ப முடியவில்லை என்றும், கொலைக்கு வேறு பின்னணி இருக்க வேண்டும் என்றும், பின்னணியில் இருப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், பரபரப்பு கிளப்பினார். இது தொடர்பான புகார் மனு ஒன்றையும், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு அனுப்பி வைத்தார்.
அதிர்ச்சி தகவல்
டாக்டர் சத்யாவின் கணவர் எழுப்பி உள்ள சந்தேகங்களுக்கு பரிலளித்த உயர் அதிகாரியோ, இந்த வழக்கில் வெளி வராத அதிர்ச்சி தகவல் ஒன்றையும் வெளியிட்டார். சத்யாவை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் தோல்வியடைந்த அரிந்தம் தேப்நாத் சத்யாவை குத்தி கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
செல்போன் திருட்டு
என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத் தான் கொலையாளி. அதற்கான முழு ஆதாரங்கள் விசாரணையில் கிடைத்துள்ளது. கொள்ளை அடிக்கப்பட்ட டாக்டர் சத்யாவின் செல்போனை, என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத், மதுரவாயல் செல்போன் கடையில் விற்றுள்ளார். செல்போனை விற்கும் போது, அரிந்தம் தேப்நாத்தை, செல்போன் கடைக்காரர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
ஆதாரம் சிக்கியது
செல்போனில் படம் எடுக்கப்பட்ட தேதி, நேரம் எல்லாம் செல்போனில் பதிவாகி உள்ளது. விற்கப்பட்ட செல்போன் மீட்கப்பட்டுள்ளது. அதேபோல டாக்டர் சத்யாவை கொலை செய்து விட்டு, அறைக்கதவை வெளியில் பூட்டி விட்டு சென்றுவிட்டான் கொலையாளி. அந்த சாவி அரிந்தம்தேப்நாத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
கொலையில் டாக்டருக்கு தொடர்பா?
இன்னொரு முக்கிய சந்தேகத்தை டாக்டர் ஜேசு கிளப்பி உள்ளார். டாக்டர் சத்யாவின் கழுத்து கச்சிதமாக ரத்த நரம்பை பார்த்து அறுக்கப்பட்டுள்ளது. இது கைதேர்ந்த டாக்டர் ஒருவர் சொல்லிக்கொடுத்துதான் செய்திருக்க வேண்டும் என்று டாக்டர் ஜேசு தெரிவித்துள்ளார்.
ரூ.2 கோடிக்கு விற்பனையா?
டாக்டர் சத்யா மெரிட் அடிப்படையில் மேற்படிப்புக்கு தேர்வாகி உள்ளார். மேற்படிப்பு சீட்டு ரூ.2 கோடி வரை விற்கப்படுகிறது. எனவே பணத்துக்கு ஆசைப்பட்டு டாக்டர் சத்யா கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டு விட்டதால், அவரது மேற்படிப்பு இடம் காலியாகி விட்டது.
அந்த இடத்தில் ரூ.2 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு இன்னொரு நபரை நியமிக்க இந்த கொலை நடந்திருக்க வேண்டும், என்றும் டாக்டர் ஜேசு குற்றம்சாட்டியிருந்தார்.
போலீஸ் மறுப்பு
ரத்தம் ஓடும் நரம்பை பார்த்து சத்யாவின் கழுத்தில் கத்திக்குத்து விழுந்துள்ளது என்று, டாக்டர் ஜேசு கூறியுள்ளதும் தவறு. சத்யாவின் கழுத்தில் தாறுமாறாக 4 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. ரத்த நரம்பை குறிபார்த்து குத்தவில்லை என்று கூறியுள்ள போலீசார்.
மேற்படிப்பில் சேர்வதற்கான காலக்கெடு கடந்த ஜூன் மாதத்தோடு முடிவடைந்து விட்டது.இனிமேல் டாக்டர் சத்யாவின் காலி இடத்தில் வேறு யாரையும் நியமிக்க முடியாது. எனவே அந்த பின்னணியில் இந்த கொலை நடக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம்
என்ஜினீயர் அரிந்தம் தனது சுகத்துக்கும், பணத்தேவைக்கும் டாக்டர் சத்யாவை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டு சத்யாவுக்கு வலை விரித்தார். அவர் விரித்த விலையில் சத்யா விழவில்லை. சத்யாவிடம் பணம் கறக்கலாம் என்று ரூ.2 ஆயிரம் கேட்கிறார். சத்யா பணம் கொடுக்கவில்லை. இதனால் இதனால் அநியாயமாக சத்யாவை கொலை செய்துவிட்டார்.
கொலையாளி வாக்குமூலம்
இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதை கொலையாளி வாக்குமூலமாக கொடுத்துள்ளார். கொலையாளியை மேலும் சில நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் உரிய தண்டனை பெற்று தரப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
குழப்பம் ஏன்?
முதலில் செல்போனுக்காக மட்டுமே கொலை நடத்திருப்பதாக தெரிவித்த போலீசார் தற்போது பலாத்கார முயற்சியில் டாக்டர் சத்யா கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறியிருப்பது இக்கொலை வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
3வது காரணம்
கொலையாளியை கைது செய்த போதே கொலையாளி அரிந்தம், டாக்டர் சத்யாவை கற்பழிக்க முயன்றிருக்கிறாரா? அதுபோன்ற முயற்சியில்தான் இக்கொலை நடந்ததா? என்பது பற்றி கேட்ட போது, அப்படி எதுவும் இல்லை என்ற மறுத்தனர். இந்நிலையில் நேற்று மாலையில் கொலைக்கான 3வது காரணமாக பலாத்கார முயற்சியில் டாக்டர் சத்யா கொலை செய்யப்பட்டார் என்று புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
குடும்பத்தினர் அதிர்ச்சி
எப்போதுமே இது போன்ற பரபரப்பான கொலை சம்பவங்களின்போது, கொலையாளி எதற்காக கொலை செய்தான், என்ன காரணம் என்பதை குற்றவாளி பிடிபடும் அன்றே போலீசார் விளக்கமாக தெரிவித்து விடுவார்கள். ஆனால் டாக்டர் சத்யா கொலை வழக்கில் போலீசார் தினமும் ஒரு தகவலை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் அவரது கொலையில் குற்றவாளி கைது செய்யப்பட்ட பின்னரும் மர்மம் நீடிப்பது போன்ற தோற்றமே நிலவி வருகிறது. இது சத்யாவின் கணவர் ஜேசு மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.