அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடக்குமா?.... தினகரன் ஆதரவாளர்கள் வழக்கு இன்று விசாரணை - வீடியோ
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ தொடர்ந்துள்ள வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அதிமுக பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட உள்ளார். இதற்காக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் முன்கூட்டியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலாவையும் துணைப் பொதுச் செயலாளர் தினகரனையும் கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், பொதுக்குழுவில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களையும் நிர்வாகிகளையும் அந்தந்த ஊர் அமைச்சர்கள் தங்கள் பொறுப்பில் அழைத்து வர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மைசூரில் மிக ரகசியமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம், ஶ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவை கூட்டக் கூடாது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.