"கண்ணியமிக்க இயக்கம்" அதிமுக- ஜெ. அறிக்கை நினைவூட்டும் சில ப்ளாஷ்பேக் நிகழ்வுகள்
சென்னை: தேமுதிக தரம் தாழ்ந்த கட்சி; அதிமுக கண்ணியமிக்க இயக்கம் என முதல்வர் ஜெயலலிதா காட்டமாக விமர்சித்திருந்தார். ஆனால் அதிமுக கண்ணியமான இயக்கம்தானா? என்பதை சில சம்பவங்களை சுட்டிக்காட்டி சமூகவலைதளவாசிகள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
தஞ்சாவூரில் முத்லவர் ஜெயலலிதா படத்தை கிழித்து எறிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து ஜெயலலிதா படம் கிழித்தெறியப்பட்டது.
இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் விஜயகாந்த் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த ஜெயலலிதா, தரம் தாழ்ந்த நடவடிக்கைகளில் தேமுதிக செயல்படுகிறது; அதிமுக கண்ணியமிக்க இயக்கம்; இந்த கண்ணியத்தில் இருந்து இம்மியளவும் பிறழக் கூடாது என அறிவுரை கூறியிருந்தார்.
அவ்வளவுதான்... சமூக வலைதளவாசிகள் ஜெயலலிதாவின் அறிக்கையை முன்வைத்து சில பல ப்ளாஷ்பேக்குகளை வரிசையாகப் பட்டியலிட்டு, ஆமா ஆமா... அதிமுக கண்ணியமிக்க இயக்கம்தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
அப்படி என்னதான் ப்ளாஷ்பேக்குகள் என்கிறீர்களா? இதோ... அதிமுகவின் "கண்ணியத்தை" பறைசாற்றும் அந்த சில சம்பவங்கள்....
- சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்த சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக அ.தி.மு.க மகளிரணியின் சேலை உயர்த்தி அளித்த வரவேற்பு,
- ஆளுநராக இருந்த சென்னாரெட்டியை திண்டிவனத்தில் முற்றுகையிட்டு அளித்த 'கண்ணியமான' கெளரவம்
- திருச்சி விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை இரும்புத் தடிகளுடன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் தாக்கியது
- முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தங்கியிருந்த இடத்திலிருந்து விமானநிலையம் வரை அ.தி.மு.க.வினர் நிகழ்த்திய லீலைகள்
- நக்கீரன் அலுவலகம் மீது இடைவிடாமல் நிகழ்த்திய கொடூர தாக்குதல்
- சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹாவுக்கு எதிரான பேனர்கள்
- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிரான ஆர்ப்பாட்ட கோலம்
என அதிமுகவின் கண்ணியமிக்க போராட்டங்களின் பெரும் பட்டியல் சுட்டிக்காட்டப்படுகிறது.