தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.... உயர் நீதிமன்றத்தில் வழக்கு... மதியமே விசாரணைக்கு வருகிறது!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து இன்று வழக்கு தொடரப்பட உள்ளது.
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். மனு தாக்கல் செய்தால் அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வழக்கு தொடருவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. அதனால் மதியமே இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்து தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான நிலை உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர். நீதிபதி ரவிச்சந்திரன் அமர்வு முன், வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, மில்டன், பாரிவேந்தர் ஆகியோர் இந்த கோரிக்கையை வைத்தனர்.
துப்பாக்கிக் சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இறந்தோர் குடும்பங்களுக்கு சட்ட உதவி அளிப்பதை தடுக்கக் கூடாது. உயிரிழந்தோருக்கு மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதை மனுவாக தாக்கல் செய்தால் இன்று மதியமே விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது. அதையடுத்து வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இன்று மதியமே இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.