ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி: பாமகவையும் சீண்டிப் பார்க்கும் பாஜக!
ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த பாமகவை சீண்டிப் பார்க்கும் வேலைகளில் பாஜக மும்முரமாக இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழகத்தில் எப்படியாவது காலூன்றுவதற்காக அரசியல் கட்சிகளை சிதைக்கும் வழக்கமான வியூகத்துடன் வலம் வருகிறது பாஜக. அதிமுக சிதைத்து திமுகவை மிரட்டி இப்போது பாமகவினருக்கும் குறிவைத்து காய்களை நகர்த்துகிறது பாஜக.
தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாத நிலையில் கட்சிகளை கபளீகரம் செய்து அதிகாரத்தில் அமர்ந்துவிட முடியாதா? என கனவு காண்கிறது பாஜக. ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவையும் ஆட்சியையும் சசிகலா கைப்பற்ற முனைந்தார்.
நெடுஞ்சாண்கிடை
இதற்கு செக் வைத்து தற்போது கஸ்டடியில் எடுத்துக் கொண்டிருக்கிறது பாஜக. ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளும் நெடுஞ்சாண் கிடையாக விழுவதில் போட்டி போட்டு அடித்துக் கொண்டன.
பொன்னார் மிரட்டல்
திமுகவோ காங்கிரஸின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் திமுகவையும் ஆட்டுவிப்போம் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பகிரங்கமாகவே மிரட்டினார்.
பாமக புறக்கணிப்பு
அதேநேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொள்கை ரீதியான அறிவிப்புடன் பாமக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. தற்போது தங்களை ஆதரிக்காத பாமகவை சீண்டும் வேலைகளில் பாஜக மும்முரமாக களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
புறக்கணிப்பால் காண்டு
வடமாவட்டங்களில் பாமகவில் இருந்து தங்களுக்கு யாரும் சிக்கமாட்டார்களா? என பாஜக ஆள் தேடிக் கொண்டிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒன்றிரண்டு பேர் கிடைத்தால்கூட அதை பயன்படுத்தி பாமகவை பலவீனப்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யலாமா? என பலே யோசனையில் இருக்கிறதாம் முகட்டை பார்த்துக் கொண்டிருக்கிறதாம் பாஜக.