கை கழுவிய கருணாநிதி- உதயமாக வேண்டிய கட்டாயத்தில் தமிழ் மாநில காங்கிரஸ்
சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மதிமுக, பாமகவை இணைவது உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் திமுகவோ அதிரடியாக காங்கிரஸை கழற்றிவிட்டு பரபரபை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே திமுக, பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கதவுகளை திறந்து வைத்து காத்திருந்தது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸுக்கான கதவை அடைத்துவிட்டது திமுக. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும் சந்தேகம் என்ற தொனியையும் திமுக உருவாக்கியிருக்கிறது.
கலக்கத்தில் காங்கிரஸ்
இதேபோல் திமுக அல்லது அதிமுகவின் தோளில் சவாரி ஏறலாம் என்று காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது திமுகவின் கதவு மூடப்பட்டுவிட்டது அதிர்ச்சிதான். திமுகவைப் போல் அதிமுகவை காங்கிரஸ் கட்சி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையாண்டுவிட முடியாது.
அதிமுக அணியில் சேருமா?
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் ஒரே ஒரு கூட்டணி வாய்ப்பு அதிமுக அணியில் இணைவது மட்டுமே. ஆனால் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் அதிமுக மிகவும் முனைப்புடனே இருக்கிறது
நோ சொன்ன அதிமுக
இதற்காக காங்கிரஸ் கட்சி கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட அத்தனை முயற்சிகளுக்குமே அதிமுக தலைமை நோ சொல்லிவிட்டதுடன் தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்பதே பதிலாக - பிடிகொடுக்காத போக்காத இருந்து வருகிறது
தேமுதிக வருமா?
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இப்போதைக்குள்ள ஒரே நம்பிக்கை தேமுதிகதான். ஆனால் பெரிய கட்சியான திமுகவே காங்கிரஸை தூக்கிப் போட்டுவிட்ட நிலையில் தேமுதிக காங்கிரஸுடன் கை கோர்க்குமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது
உதயமாகுமா தமிழ் மாநில காங்கிரஸ்?
தற்போதைய சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் உடைந்து முன்னைப் போலவே தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக் கட்சி உதயமாக வேண்டிய கட்டாயம்தான் உள்ளது. அப்படி உதயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது. அரசியலில் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்க வேண்டும் என்பது ஜி.கே.வாசன் ஆதரவாளர்களின் நீண்டகால கோரிக்கை. அதற்கான தருணமாகவே இப்போதைய சூழலில் வாசன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
தயங்கும் வாசன்
ஆனால் ஜி.கே.வாசனோ தனிக்கட்சி கண்டு ஒன்றிரண்டு சீட்டுக்காக பணத்தை வாரி இறைப்பதா என்ற பலத்த யோசனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எல்லாம் சோவின் கையில்
இருப்பினும் ஜி.கே.வாசனின் அரசியல் ஆலோசகராக கருதப்படுகிற துக்ளக் சோவின் உறுதியான, இறுதியான ஆலோசனையின் பேரிலேயே அடுத்த கட்ட நடவடிக்கையை ஜி.கே.வாசன் மேற்கொள்வார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள். ஆக புதிய பரபரப்புகள் காத்திருக்கிறது தமிழக காங்கிரஸில்...