அரசியல் படித்து அதிமுக எம்.பி வேட்பாளர் ஆன திருப்பூர் சத்யபாமா
திருப்பூர்: திருப்பூர் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சத்தியபாமா வாசு (42), அரசியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செம்பூத்தாம்பாளையம் இவரது சொந்த ஊர். இவரது கணவர் வாசு, விவசாயம் செய்து வருகிறார். கொங்கு வேளாளக் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் சத்தியபாமா வாசு தற்போது வசித்து வருகிறார். பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவரது மகன் சத்தியவசந்த் ஏரோநாட்டிக்கல் பயின்று வருகிறார்.
2001-இல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்தார். 2001-இல் கோபி நகர்மன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 14-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001 முதல் 2006 வரை கோபி நகர்மன்ற துணைத் தலைவராகப் பணியாற்றி உள்ளார்.
2001-இல் கோபி நகராட்சி 14-ஆவது வார்டு அ.தி.மு.க. இணைச் செயலாளராக இருந்துள்ளார்.
மகளிர் அணித்தலைவி
2007-இல் ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். 2010 முதல் தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்
2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 8-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கோபி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்து வருகிறார்.
அதிருப்தியில் வேட்பாளர்
சத்யபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு புகார்கள் அதிமுக தலைமைக்கு பறந்து கொண்டுள்ளது. வேட்பாளராக நீடிப்பாரா அல்லது மாற்றப்படுவாரா என்று எதிர்பார்க்கத்தொடங்கியுள்ளனர் திருப்பூர் மாவட்ட அதிமுகவினர்.